ரேச்சல் கார்சனின் ஒலியற்ற வசந்தம் (

Rachel Carson - Silent Spring

)
Rachel Carson - Silent Spring - Tamil Katturaikal - General Articles

நண்பரொருவர் பெங்களூருக்கருகே வாங்குவதற்காக ஒரு ஏக்கர் நிலம் பார்த்து வைத்திருப்பதாகவும் அதை எங்களுக்குக் காட்ட விரும்புவதாகவும் கூறி ஒரு நாள் காலை எங்களைக் கூட்டிச்சென்றார். ஒரு பரந்த ஏரிக்கரையில் காரை நிறுத்தித் தான் தேர்ந்தெடுத்த பகுதியைக் காட்டினார். அங்கு முழு அமைதி நிலவியது. ஏரியிலோ அல்லது மேலே வானத்திலோ ஒரு பறவையைக்கூடக் காணவில்லை. பைனாகுலரில் ஏரிக்கரையைக் கவனித்தோம். ஒரு உயிரினத்தையும் பார்க்க முடியவில்லை. வரும் வழியில் ஒரு டீக்கடையில் நிறுத்தியபோது, அவரிடம் அந்த இடம் முழுவதும் வேதியல்ரீதியாக மாசுபட்டிருக்கின்றது என்று நாங்கள் கருதுவதாகக் கூறினோம். சுற்றுப்புறத்திலிருந்த பயிர்த்தோட்டங்களில் பயன்படுத்தப்பட்ட நச்சு மருந்துகள் அந்த ஏரிகளில் கலந்து, சிற்றுயிர்களை அழித்துவிட்டன. அதனால்தான் அங்கு புள்ளினம் எதுவும் காணப்படவில்லை என்று விளக்கினோம். நண்பர் சிந்தனையில் மூழ்கினார். பூச்சிக்கொல்லி மருந்துகள் நம் சுற்றுச் சூழலை நாசஞ்செய்வது பற்றி முதன்முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் அமெரிக்கப் பெண் ரேச்சல் கார்சன் (1907&1964) அமெரிக்க அரசின் காட்டுயிர் துறையில் ஒரு கடல்சார் உயிரியலாளராகப் பணியாற்றினார்.

கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி இவர் எழுதிய The Sea Around Us என்னும் நு‘ல் இவரை ஒரு உன்னத அறிவியல் எழுத்தாளராக உலகிற்கு அடையாளம் காட்டியது. பின்னர் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியல் பொருள்கள் இயற்கையின் சமநிலையைச் சிரழிப்பது பற்றி கூட The Newyorker பத்திரிக்கையில் மூன்று தொடர் கட்டுரைகளை வெளியிட்டார். 1962இல் ஆங்கில எழுத்தாளர் ஜூலியன் ஹக்ஸ்லியின் முன்னுரையுடன் புத்தக வடிவில் Silent Spring (ஒலியற்ற வசந்தம்) என்னும் தலைப்பில் வெளியானது. முதல் பதிப்பே ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்ற இந்நு‘ல் சுற்றுச்சூழல் இயக்கத்தைத் தொடங்கி வைத்த சக்தி எனப் போற்றப்படுகின்றது. அன்றிலிருந்து இன்றுவரை அமோக விற்பனை மட்டுமல்லாது, லட்சக்கணக்கான வாசகர்களுக்குச் சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. இந்நு‘லின் தாக்கத்தைக் கண்டு வியந்த ப்ரிஸில்லா மர்ஃபி என்ற ஒரு எழுத்தாளர் அதைப் பற்றியே ஒரு புத்தகம் எழுதிவிட்டார். What a Book Can Do; The Publication Reception of Silent Spring என்ற தலைப்பில். ரேச்சலின் இந்நு‘லின் சாராம்சம் ஏ.ஜே. கனகரட்னாவால் "ஒலியற்ற இளவேனில்" என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரேச்சல் ஒரு உயிரியலாளர் மட்டுமல்ல. திறமையாக எழுதும் வரம் பெற்றவர். இவ்விரு கூறுகளையும் பயன்படுத்தி வரலாற்றின் போக்கையே மாற்றிய இந்நு‘லை எழுதினார். "அமெரிக்காவின் மத்தியில், சுற்றுச்சூழலுடன் இயைந்து வாழ்ந்துகொண்டிருந்தது ஒரு சிற்று‘ர்" என்று இந்நு‘ல் தொடங்குகிறது. இவ்வூருக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒரு வசந்த காலத்தில் திரும்பிவரும் ரேச்சல், அங்கே பறவைகள் சத்தம் ஏதும் கேட்கவில்லை என்பதைப் பதிவுசெய்கின்றார். பனிக்காலம் முடிந்து, வசந்த காலம் ஆரம்பிக்கும் போது புள்ளினம் இனப் பெருக்கம் செய்யத் துவங்குகின்றது. பனி நீங்கித் தரையில் சிற்றுயிர் பெருகும் காலம் இது. எங்கும் அமைதி நிலவிற்று? என்ன ஆயிற்று? இந்தக் கேள்வியின் விடை தான் இந்நு‘ல். இந்த ஊர் உலகில் எந்த நாட்டிலும் இருக்கலாம்.

1942இல் வேதியல் நச்சுப்பொருள்களில் முக்கியமான DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து உருவாக்கப்பட்டது. இதன் சிருஷ்டி கர்த்தா பால் முல்லர் என்ற விஞ்ஞானிக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பூச்சிக் கொல்லி நச்சு பல அவதாரங்கள் எடுத்துப் பல பெயர்களில் வெளிவந்தன. ஐம்பதுகளில் இந்த நச்சுப்பொருள்கள் வேளாண்மைக்குப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. இதன் தீய விளைவுகளைக் கவனிப்பதற்கும் இருபது வருடங்களாகிவிட்டன. பல சோதனைச்சாலைகளில் செய்த ஆய்வுகள் இந்த மருந்துகளால் வரும் கேடுகளை உறுதிசெய்தன. இந்த நச்சு இன்று உலகெங்கும் பரவி நிலைகொண்டு விட்டது. எஸ்கிமோக்களின் உடல்களிலும் இவை நிரம்பியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மருந்துகளின் வேதியல் கூற்றின் அடிப்படை இயல்பு அவற்றின் அழியாத்தன்மை (Persistance) எந்த இடத்திலும் எந்த உடலிலும் அது வீரியம் குறையாமல், அழியாமல் இருக்கும். நீரில் இருந்து, தவளையின் உடலில் சென்று பின் அதை உண்ணும் செம்பருந்துவின் உடலில் புகுந்து, அந்தப் பறவையை அழித்துவிடுகின்றது. இம்மருந்துகள் மனிதரின் ஈரலில் குடிபோகின்றன. நம் ஈரலின் ஒரு முக்கியப் பணி உடலுக்குள் செல்லும் நஞ்சைச் செயலிழக்கச் செய்வது. இதை ஓரளவிற்குத்தான் அது செய்ய முடியும். அன்றாடம் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் நம் உணவின் மூலம் உடலிற்குள் செல்லும்போது, சாதாரணமாக மஞ்சள் காமலை நோயுடன் போராடி வெல்ல பலத்தைத் தரும் ஈரல் இந்தச் சக்தியை இழந்து, மனிதர் இறக்க நேரிடுகின்றது. அவர் மஞ்சள் காமாலை நோயால் இறந்தார் என்றுதான் அவரது மருத்துவ ஆவணம் கூறும்.

அதேபோல ஆர்கனோக்ளோரின் என்ற வேதியல் பொருள் நீரிழிவு நோய்க்குக் காரணியாவது மட்டுமல்ல, புற்றுநோயையும் உருவாக்குகின்றது. இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார் ரேச்சல். அமெரிக்காவின் பல சோதனைக்கூடங்களின் கள ஆய்வுகள் மூலம் கிடைத்த தரவுகளைச் சேகரித்து, மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களுடன் தனது வாதத்தை முன்வைத்தார். வேதியல் தொழிலதிபர்கள் ரேச்சலுடன் போர் தொடுத்தனர். எனினும் அவரது கண்டுபிடிப்புகள், மறுக்க இயலாத சாட்சியங்கள், அறிவியல் உலகை ஒரு உலுக்கு உலுக்கின. இவர் எழுப்பிய கேள்விகள் அமெரிக்க பார்லிமென்டில் விவாதிக்கப்பட்டன. உலகின் பல அரசுகள் வேதியல் நச்சு மருந்துகள் பயன்பாடு பற்றிச் சட்டங்கள் இயற்றின. 1971இல் DDT தயாரிப்பை அமெரிக்கா தடைசெய்தது. பின்னர் உலகின் பல நாடுகள் இதைத் தடை செய்தன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பூச்சிமருந்து உற்பத்திச்சாலைகள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அவதியுறும் வளரும் நாடுகளுக்கு மாற்றப்பட்டன. இதேபோலச் சிகரெட் தயாரிப்பு, காகித உற்பத்தி போன்ற பல தொழிற்சாலைகள் ஏழை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தன. இந்தியாவில் போபாலில் யூனியன் கார்பைடு கம்பெனியின் தொழிற்சாலையில் 1984இல் ஏற்பட்ட விபத்தில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். இறந்தவர் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்ட மற்ற தொழிலாளர்களுக்கும் தர வேண்டிய ஈட்டுத்தொகை இன்னும் தரப்படவில்லை.

நம் நாட்டிலும் சுற்றுச்சூழல் இம்மருந்துகளால் சீரழிக்கப்பட்டதற்குப் பல பறவைகள் அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே சான்று. எழுபதுகளில், சென்னை வாலாஜா சாலையில், பிரெசிடென்சி கல்லூரி மாணவிகள் விடுதி முன் ஒரு புளியமரத்தில் தினமும் பல செம்பருந்துகள் அடையும். விடியற்காலையில் சூரியன் எழுந்தவுடன் இப்பறவைகளைத் தரிசிக்க அம்மரத்தைச் சுற்றி ஒரு கூட்டம் நிற்கும். இன்று இவ்வழகிய பறவையைச் சென்னையில் பார்ப்பதே அரிதாக இருக்கின்றது. இரைகொல்லிப் பறவைகளின் உடலில் பூச்சிமருந்துகளிலுள்ள நச்சு தங்கி, அதன் முட்டைகள் பொரிக்காதவாறு செய்துவிடுகின்றன. இதேபோல் இங்கிலாந்தில் ப்ரெக்ரைன் ஃபால்கன் (Pregrine falcon) என்ற இரைகொல்லிப் பறவை மறைவதைப் பற்றி ஜூலியன் ஹக்ஸ்லி எழுதியிருக்கின்றார். இந்தக் கம்பீரமான பறவை இந்தியாவிற்கு வலசை வருகின்றது. தமிழ்நாட்டில் பல நீர்நிலைகளில் இவை மீன் வேட்டையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். பறக்கும்போது கீழிலிருந்து பார்த்தால் ஒரு வில்வடிவில் தோன்றுவதால் இதன் தமிழ்ப்பெயர் வில்லேந்திரம். இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் பறவைகள் சுற்றுச்சூழலின் நிலையைப் பற்றிய ஒரு குறியீடு. ஒரு லிட்மஸ் சோதனை.

ஊட்டி நகருக்கு வெளியே பகலில் அவலாஞ்சி சாலையிலோ அல்லது கோரகுந்தா பாதையிலோ சென்றீர்களேயானால், எப்போதும் "டுர்ர்ர்" என்றொரு ஒலி பின்னணி போல் கேட்டுக்கொண்டிருக்கும். முட்டைக்கோஸ், உருளைக்கிழங்குத் தோட்டத்தில் பூச்சிமருந்து அடிக்கும் ஒலி. தினமும் இவ்வளவு நச்சுப் பொருளைப் பூமியில் செலுத்தினால் அதன் விளைவைப் பாருங்கள். இதேபோலத் தேயிலைத் தோட்டமெங்கும் பூச்சிமருந்துகள் வீசப்படுகின்றன. இந்த நச்சு தீமைசெய்யும் பூச்சிகளை மட்டுமல்ல, அங்கு வாழும் எல்லாச் சிற்றுயிர்களையும் அழித்துவிடுகின்றது. ஒரு உயிரினத்தைக் குறிவைத்து மருந்து தெளிக்கும்போது, ஐம்பதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் அழிகின்றன. மழை பெய்யும்போது இந்த நச்சு மலை அருவிகளில் கலந்து, சம வெளியிலுள்ள பவானி போன்ற நதிகளில் கலக்கின்றது. காவிரியில் முன்பு பரவலாகக் காணப்பட்ட கருப்புக் கெண்டை இன்று அற்றுப்போய்விட்டது.

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் பாதிரி என்னும் கிராமத்தைச் சுற்றியுள்ள முந்திரித்தோட்டத்தில் தெளிக்கப்பட்ட என்டோசல்பான் எனும் மருந்தின் விளைவை 2001இல் ஆராய்ந்த Indian Council of Medical Research அங்குள்ள குழந்தைகளின் ரத்தத்தில் இம்மருந்தின் எச்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. மூன்றாண்டுகளுக்கு முன், டில்லியில் வாழும் தமிழ்ப் பெண் ஒருவர், பாதிரி கிராமத்தி; கடந்த பத்தாண்டுகளில் பல உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறந்திருப்பதை ஒரு குறும்படத்தின் மூலம் காட்டினார். சென்னையில் இப்படத்தைத் திரையிடக் கல்லூரி கல்லூரியாகச் சுற்றினார். கடைசியில் இரண்டு கல்லூரிகளில் மட்டுமே திரையிட முடிந்தது. நம் நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துத்தொழிலில் ஆண்டுக்கு 5,000 கோடி புரள்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியல் நச்சுப்பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் இன்னும் உருவாகவில்லை. இதை ஏதோ உரத்தைப் போடுவதைப் போல் பயன்படுத்துகிறார்கள். அவற்றைக் கையாளும்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விவசாயிகளுக்குத் தெரிவதில்லை. அண்மையில், காட்டில் புறா ஒன்றைச் சுட்டு, அதைப் பொரித்துத் தின்ற இருவர் இறந்த செய்தி நாளிதழில் வந்தது. அவர்கள் பூச்சிமருந்து டின் ஒன்றில் கடலெண்ணை வாங்கிப் பயன்படுத்தியதால் வந்த விளைவு. இதேபோல மருந்து பாட்டில் ஒன்றை ஒரு சிறு குட்டையில் கழுவியதால் பின் அதில் நீரருந்திய நான்கு எருமைகள் செத்த செய்தியும் வந்தது. தாய்ப் பாலில் DDTயின் எச்சமிருப்பது பல கிராமங்களில் கண்டறியப்பட்டிருக்கின்றது. தானுண்ட நீரைத் தலையாலே தான் தரும் தளரா வளர்தெங்கின் இளநீரில்கூட வேதியல் நச்சு போய் சேர்ந்திருப்பது சோதனைகள் மூலம் தெரிய வருகின்றது. இங்கெங்கெனாத படி வேதியல் நச்சு சுற்றுச்சூழலிலும் நம் உடலிலும் கலந்து, நிலை பெற்றுவிட்டது. சிறு கிராமங்களில்கூட, வெற்றிலை, பாக்கு போல இம்மருந்துகளை விற்கும் பெட்டிக்கடைகளைக் காணலாம்.

இயற்கையின் நியதியில், இயற்கையை நோண்டும் எந்த ஒரு செயலுக்கும் ஒரு விலை உண்டு. ஒரு பதிலடி உண்டு. இயற்கையில் திருத்த முடியாத மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதன் விலையை ஒவ்வொரு தலைமுறையும் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்... அணுவைப் பிளந்தது ஒரு எடுத்துக்காட்டு.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link
Site Meter