மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை 1வது பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்
மேஷ ராசியின் சிறப்பு: ராசிக்கட்டத்தில் முதன்மையாக வரும் மேஷ ராசி பூமி தத்துவத்தைக் கொண்டதாகும். செம்மறி ஆட்டின் தலை இதன் உருவமாகும். மேஷத்தை தன் ராசியாகவும் லக்னமாகவும் கொண்டவர்கள் எந்த காரியத்தையும் சாமர்த்தியமாக செய்து முடித்து விடுவார்கள். பொதுவாக இவர்களின் தேகம் மெலிந்து காணப்படும்., நிமிர்ந்த நடை, அடர்ந்த புருவம், செவ்வரியோடிய கண்கள் உடைய இவர்கள் அன்பு, கண்டிப்பு இரண்டையும் கலந்து செயல்படுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அரசுத் துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிதல், போலீஸ், ராணுவம் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். எளிதில் கோபப்படும் சுபாவம் இவர்களுக்கு உண்டு. தன்னிடம் சரண் அடைந்தவர்களுக்கு அன்பும், ஆதரவும் காட்டுவார்கள். மேஷத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-செவ்வாய். அதிர்ஷ்ட மலர்-செண்பம். அதிர்ஷ்டக் கல்-பவளம். அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு. அதிர்ஷ்ட திசை-தெற்கு. அதிர்ஷ்டஎண்-9. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-சுப்பிரமணியர்.
மேஷ ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: அசுவினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி கேது ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை கேது ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகும், கவர்ச்சியும் மிக்கவர்களாக இருப்பார்கள். அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-கேட்டை நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும். பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. அதிர்ஷ்ட மலர்- செவ்வல்லி. அதிர்ஷ்ட நிறம்-கரும்பச்சை. அதிர்ஷ்ட எண்-1. இந்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சாந்தமும், தயாள குணமும் உடையவர்கள். பிறரை எளிதில் புரிந்துகொண்டு செயல்படுவார்கள். சில சமயங்களில் இவர்கள் பேசுவது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களின் நெற்றி உயர்ந்திருக்கும். கல்வி அறிவு மிக்க இவர்கள் வாதம் செய்வதில் வல்லவர்கள். எப்பொழுதும் எதாவது ஒன்றிற்காக கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருப்பார்கள். எப்போதும் அமைதியாகவும் அடக்கமாகவும் காணப்படுவார்கள். எவரையும் வžகரிக்கும் சக்தி இவர்களிடம் உண்டு. இவர்களிடம் சில சமயம் சுயநலம் தலை தூக்கும். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் விசாலமான அறிவு உடையவர்கள். எப்போதும் உண்மையே பேசும் இவர்களிடம் பணமும் நல்ல நண்பர்களும் தங்குவது குறைவாகவே இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சுக்ரன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சுக்ரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாக்குத் தவறாதவர்கள். மக்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- அனுஷம் நட்சத்திரம் திருமணம் செய்ய. தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, விசாகம். அதிர்ஷ்ட மலர்-வெண்தாமரை. அனுகூல தெய்வம்-லட்சுமி. அதிர்ஷ்டக் கல்-வைரம். அதிர்ஷ்ட நிறம்-வெண் நீலம். அதிர்ஷ்ட எண்-2. பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிவந்த மேனியும் பருத்த உடலும் உள்ளவர்கள். இவர்கள் எப்போதும் நியாயத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருப்பார்கள். பிறரின் பேச்சைக் கேட்டு அதன்படியே நடப்பார்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் தன்மானம் மிக்கவர்களாக நடப்பார்கள். இரக்ககுணம் உடைய இவர்கள் சில சமயம் தன்னைத்தானே உயர்வாக மதிப்பிடுவார்கள். விரோதிகளையும் வென்று புகழை அடைவார்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் எளிதில் ஆத்திரப்படும் சுபாவம் உடையவர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றியும், ஆதாயமும் பெறுவார்கள். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பருத்த தேகம் உடையவர்கள். இவர்களிடம் செல்வம் வேகமாக வந்து சேரும். கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் உடையவர்கள். இவர்களுக்கு உடன் பிறந்தவர்களால் ஏற்படும் அனுகூலம் குறைவாகவே இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சூரியன். அவர்களின் ஆரம்ப தெசை சூரியன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவுத் திறனும் ஆற்றலும் மிக்கவர்கள். அதிகமாகத் தூங்க மாட்டார்கள். கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- விசாகம் நட்சத்திரம், திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-மந்தாரை. அனுகூல தெய்வம்-சிவன். அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம். அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு. அதிர்ஷ்ட எண்-3. கார்த்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் நண்பர்கள் சூழக் காணப்படுவார்கள். வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ள இவர்களுக்கு உடலில் உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் இருந்துகொண்டே இருக்கும்.
பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் விக்ருதி வருடம் கார்த்திகை மாதம் 5ம் தேதி 21-11-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மணி 10.54.மணிக்கு பூரட்டாதி 4ம் பாதம் மீன ராசியில் பிரவேசிக்கிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 11ம் இடத்தில் இருந்து பல வளங்களை அள்ளித்தந்து கொண்டிருந்த குரு 12ம் இடத்திற்கு மாறுகிறார். பெண்கள் எந்த சூழலிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படும் நேரம் இது. பங்குச் சந்தை, பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும் வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வருதல் நல்லது. சுய தொழில் புதிய முதலீடுகளில் கவனமாய் இருந்தால், இழப்புகள் குறையும். உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருங்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உண்மையான திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். பயணங்களின் போது புதியவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தனியார் துறையில் பணிபுரிவோருக்கு, உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை இருக்கும். தெய்வ பலம், நேர்மையான போக்கு- இரண்டையும் பக்க பலமாக வைத்துக்கொண்டால் வெற்றியும் மதிப்பும் உங்களைத் தேடிவரும்.
பெண்களுக்கு: இணக்கமாய் நடந்து கொள்வதில் கவனமாய் இருந்தால் கணவன் வழி உறவுகள் உங்களுக்கு சாதகமாய் இருக்கும். சிறிய வேலைகளை முடிப்பதற்கான அலைச்சல் அதிகரிக்கும். ஆயாசம் தோன்றாத வகையில் சத்தான உணவு வகைகளை உண்ணுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் உள்ள பிரச்சினைகளை நிதானமாக கையாளவும். அவர்களிடம் உரையாடுகையில் பேச்சில் பட படப்பைத் தவிர்த்து விடவும். புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் தராதரமறிந்து அளவோடு பழகுதல் நல்லது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
மாணவர்களுக்கு: படிப்பு விஷயங்களில் சிறிது மந்த நிலை ஏற்பட்டாலும், உங்கள் விடா முயற்சியால் இந்த நிலையை மாற்றி விடலாம். எந்த சிறிய விஷயமாயினும், உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கு தயார் செய்யும் சமயம் எழும் சந்தேகங்களுக்கு விடை தேட அலைய வேண்டியிராது. மூத்தோர் சொல் அமிர்தம் என்பதற்கிணங்க அவர்கள் தரும் ஆலோசனைகளை அவசியம் பின்பற்றி வாருங்கள். நற்பலன்கள் எளிதில் கிட்டும். அதிக அலைச்சல் அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித்தனமாகும்.
வியாபாரிகளுக்கு: வியாபார வட்டத்தில் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி வரும். எதிர்பாராத வரிச் செலவு கூடும். எனவே வாடிக்கையாளர்களின் வரவுக்கு ஏற்றவாறு சரக்குகளைக் கொள்முதல் செய்து கொள்வது அவசியம். புதிய தொழிலை இந்த காலத்தில் தொடங்க வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். பணவிஷயத்தில் சற்று கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அதிக முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறும். பணியாளர்களோடு வியாபாரிகளும் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: புதிய இலாக்காவிற்கு மாறும் வாய்ப்பிருப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய சின்ன சலுகைகளை முறையாக பயன்படுத்தி வாருங்கள். பெரிய இழப்புகளைத் தவிர்ப்பதுடன் உங்கள் பெயரையும் காப்பற்றிக்கொள்ள முடியும். தொழிலாளர்களின் முயற்சியில் தடைகள் வரலாம். ஆனாலும் அதை சாமர்த்தியமாக முறியடித்து வெற்றி காண திட்டமிட்டு வேலை செய்வது அவசியம். தீவிர முயற்சியின் பேரில் காரிய அனுகூலம் ஏற்படும். பணிக்கு உரிய மரியாதையை அளித்து வந்தால் உங்களுக்கு உரிய மரியாதை தானே கிடைக்கும். எந்த சூழலிலும் பொறுமை காப்பது அவசியம்.
கலைஞர்களுக்கு: புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றாலும் அதற்குரிய புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். எடுக்கும் பணியில் சிரத்தை எடுத்து செய்தால், வேண்டிய பலனும், பாராட்டும் தானே வந்து சேரும். புதிய சொத்து வாங்கும் எண்ணங்களை தள்ளிப்போடுவது நல்லது. அடிக்கடி மேற்கொள்ளும் வெளியூர் பயணம் மூலம் பெறும் பலன்கள் சொற்பமாக இருப்பதால், திறமையை முழு அளவில் பயன்படுத்தினால் நல்ல இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
விவசாயிகளுக்கு: கஷ்டப்பட்டு உழைக்கும் அளவிற்கு விவசாயத்தில் வளம் காணலாம். கடன், மானியத் தொகை முதலியவை பெற தேவையான ஆவணங்களை அறிமுகம் இல்லாதவர்களிடம் கொடுப்பதைத் தவிர்த்தால் வீண் தொல்லைகள் உண்டாகாது. விவசாயத்திற்கு வேண்டிய கருவிகளை கடனாகப் பெறுதல், கடனாகத் தருதல் இரண்டிலும் கவனம் தேவை. நல்ல மகசூல் தரும் பயிர்களைத் தேர்வு செய்வதோடு அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். அரசு வகையில் அனுகூலமான போக்கு உருவாகும் வரை காத்திருந்தால், வேண்டிய சலுகைகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு: எதிர்பார்த்த வகையில் விஷயங்கள் அமையாமல் சிற்சில பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே திட்டங்கள் நிறைவேறும்வரை பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுவது அவசியம். பொதுவாக அலைச்சல் அதிகரிக்கும். பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் இருப்பதோடு அமைதியாகவும் வேலைகளில் ஈடுபட முடியும். அவ்வப்போது வழக்குகளில் போக்கை கவனித்து வருவது அவசியம். உடன் இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும். பொதுக்கூட்டம் முதலியவற்றில் பக்குவமாக நடந்து கொள்ளவும்.
பரிகாரங்கள்: வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். வயதானவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வதோடு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வரவும். செவ்வாய்கிழமைகளில் துர்க்கை அன்னையை ஆராதித்து வர, மன சங்கடங்கள் யாவும் படிப்படியாக விலகும். குடும்ப சூழலிலும் இணக்கமான சூழல் நிலவும்.