பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு நேற்று அதிகாலை 1.18 மணியளவில் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. வானில் பறந்து சென்ற சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து, விமானி பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, விவரத்தை தெரிவித்து தரையிறங்க அனுமதி கேட்டார்.
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அந்த விமானத்தை மீண்டும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் விமானி பத்திரமாக தரையிறக்கினார். விமானம் புறப்பட்ட சுமார் 1 1/2 மணி நேரத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
இதனால் 151 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அந்த விமானத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் இரவு 7 மணிக்கு கோலாலம்பூருக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.