
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடைபெறுகிறது. இதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதை தடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபை மேற்கொண்ட தீர்மானத்துக்கு சீனா, ரஷ்யா நாடுகள் முட்டுக்கட்டை போட்டன. இதனை அடுத்து ஐ.நா.சபை சார்பில் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அனன் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டு சமரச திட்டம் ஒன்றை உருவாக்கினார். இதை சிரியா அதிபரும் ஏற்றுக் கொண்டார்.
அதன்படி வருகிற 12-ந் தேதி அதிகாலை 6 மணி முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இது பற்றி கோபி அனன் கூறுகையில், "இது பற்றி அரசாங்கம் மற்றும் எதிர்தரப்பு காமாண்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே இரு தரப்பினரும் எத்தகைய ஆயுதங்களையும் கையாளக் கூடாது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சிரியா அரசாங்கம் ஏதாவது குறுக்கு வழி இருக்குமா? என்பதை ஆராய்ந்து வருவதாக எதிர்தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஐ.நா.சபைக்கான சிரியா தூதர் பஷீர் ஜபாரி கூறுகையில், "இந்த சண்டை நிறுத்தத்தில் போலீசார் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் பொதுமக்களுக்கு போலீசாரே பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது" என்று கூறினார். ஆனால் எதிர்தரப்பினர் கூறுகையில், 'ராணுவத்தினருடன் போலீசாரும் சேர்ந்து தான் தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்றனர்' என்று கூறினர். எனவே 12-ந் தேதி சண்டை நிறுத்தம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.