இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் 1 1/2 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வடக்கு இலங்கை பகுதியில் உள்ள தமிழர்களை சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதை இலங்கை அரசு மறுத்தது.
இந்நிலையில் கிளிநொச்சி பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 தமிழ் சிறுவர்கள் பலியானார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-
கிளிநொச்சி அடுத்த பளை-முல்லையடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். கூலி தொழிலாளி. இவரது மகன்கள் தமிழ்மாறன் (4), சுனோஜன் (2). இருவரும் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு கிடந்த வெடிகுண்டை எடுத்து கீழே போட்டனர். அப்போது வெடிகுண்டு வெடித்து 2 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். இச்சம்பவம் கிளிநொச்சி பகுதியில் உள்ள தமிழர்களிடம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.