21 மே, 2013. செவ்வாய்க்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 27 ஏப்ரல் 2012

உலகச்செய்திகள் : Latest World News

ராஜபக்சேதான் முள்ளிவாய்க்காலை அழிக்கும்படி உத்தரவிட்டார்: ஜெய சூர்யா

கொழும்பு, ஏப். 27-
Rajapakse personally authorized final stages of war: SL Army Chief Jagath Jayasurya - World News Headlines in Tamil

முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் குருநாகல் பகுதியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000-க்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.

இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.

அவர் கொடுத்த தைரியத்தில்தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிகட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா.

ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கான வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.


Site Meter