முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

குடிமக்கள்

கவிதாசன்

மண்ணின் மைந்தர்களே,
நீங்கள் நம்பினால் நம்புங்கள்.
 
அரசியல் வாதிகளும்,
ஆளும் வர்க்கத்தினரும்,
உங்களுக்காக பல
நலத்திட்டங்கள் தந்துள்ளனர்.
 
கள்ளச்சாராயத்தை ஒழித்துவிட்டு
நல்ல சாராயம் தந்தார்கள்.
 
உங்களின் எதிர்காலத்திற்காக,
கோடிகள் தர நினைத்து,
வாரம் முழுதும் சேர்த்த
உங்கள் பணத்திற்கு
ஒரு வாரப் பரிசுச்சீட்டும்,
மாதம் முழுதும் சேர்த்த
உங்கள் பணத்திற்கு
ஒரு மாதப் பரிசுச்சீட்டும் தந்து,
இறுதியில் உங்களை
தெருக்கோடியில் நிறுத்தி விட்டார்கள்.
 
காலையில்
கஞ்சிக்கு அல்லாடும் நீங்கள்,
மாலையில்
குதிரைச்சவாரி செய்து,
குப்புற விழுவதேன்.
 
குடிமக்களே உங்களை,
காலம் பூராவும் அவர்கள்,
அடிமைத் தளத்தில்
ஆழ்த்தி விட்டார்கள்.
 
மண்ணின் மைந்தர்களே,
நீங்களாக திருந்தாவிட்டால்,
நிச்சயம் சீரழிந்துப் போவீர்கள்.

புதுக் கவிதை

Site Meter