முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

மனம் திறந்து ஒரு வார்த்தை

லீலா நாராயணசாமி

உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை வாய்ந்தது.
தன் இயல்பை இழக்க யாரும் விரும்புவதில்லை.
அங்கே எதிர்ப்புகள் வார்த்தைகளால் அல்லது செயல்பாட்டினால் உடன் உணர்த்தப்படுகின்றன.
இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.
இங்குதான் நான் ஒரு உண்மையை உணர்த்த விழைகிறேன்.
எண்ணங்கள் வடிவம் கொள்வது எழுத்துக்களால் எனில்
எழுத்துக்களின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் அல்லவா?
எழுத்துக்கள் இடம் மாறினால்? அல்லது தவறாக உச்சரிக்கப்பட்டால்?
அது ஒரு கொலைக்குச் சமம் அல்லவா?
எழுத்துக்களின் எழில் அரசி தமிழில் வரும் "ழ" என்ற எழுத்து.
தனிச்சிறப்பு வாய்ந்த இந்த எழுத்தைக் கொடுமையாக கொலை செய்பவர்கள் தமிழர்களே.
"வழி"யை "வளி" என்றும் "மழை"யை "மளை" என்றும் "பழ"த்தை" பளம்" என்றும் மிகத்தவறாக உச்சரிப்பவர்கள்
கீழ்த்தட்டில் மட்டுமல்ல மேல்தட்டில் உள்ளவர்களும்தான்.
தொலைக்காட்சிகளிலும்கூட இந்தக்கொலை இயக்குநர்களாலேயே மிகச் சாதாரணமாக நடக்கிறது.
இதனால் மற்ற மொழி பேசும் மக்களிடையே தமிழில் "ழ" இல்லை என்ற உணர்வு வலுத்திருக்கிறது.
இதற்கு உதாரணம், வெளி மாநிலங்களில் "பழனி", "பளனி" என்று எழுதப்பட்டிருப்பதே.
தமிழ்த்தாயின் அவயங்களை சித்ரவதை செய்வது அத்தாயின் மக்களே.
இக்கொடுமை இந்தத் தாய்க்கு மட்டுமே நடந்து வருகிறது.
"என் அவல நிலையைச் சொல்லி அலற எனக்கு நாவில்லையே"
என்று தமிழ்த்தாய் மௌனக்கண்­ணீர் வடிக்கிறாள் இதோ!
 இறைவா நான் செய்த சாபம் என்ன?
 இந்த அவலநிலை வந்ததென்ன?
 என்னை ஊனமாக்கி நிறுத்திவிட்டார்
 கண்ணைக் குத்திக் குருடாக்கி விட்டார்
 என் மக்களிடம் முறையிட வழியில்லையே!
 அவரன்றோ இந்நிலைக்குக் காரணங்கள்
 எழுத்துக்கள் ஒரு மொழியின் கண்களன்றோ?
 பழுது அடையின் பொருள் அங்கு மாறுமன்றோ?
 சிறப்புறுப்பாம் "ழ" என்ற எழுத்தினோடு
 சினம் வெறுப்பேதுமுண்டோ? சொல்வீர் ஐயா!

புதுக் கவிதை

Site Meter