முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

தொலைவிலிருக்கும் மலை

சிபிச்செல்வன்
தொலைவிலிருந்து மலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

எவ்வளவு தூரம்
எவ்வளது அழகு

மலையில் துயிலும் கனவு
நினைவில் தொடரும்

அம்மலையை
சதா பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அடிவாரத்தில் மேயும் கால்நடைகளின்
கழுத்து மணியோசை கேட்கும் தொலைவில்
அம்மலையை வியப்புடன் பார்த்தவாறே நிற்கிறேன்

மலைப் பாதையில்
புதர்களை விலக்கிக்கொண்டு
பறக்கும் மேகங்களில் நனைந்தவாறு
மலையேற்றம் சதா நடக்கிறது.

உச்சியைத் தொடும் இலக்கில் மூச்சிரைக்க
மலைப் பள்ளத்தாக்குகளில், ஒளிரும் மின்மினிப்
பூச்சிகளாக அசைந்துகொண்டிருக்கும் நகரம்,
இருள் சூழ்ந்த வானில் மினுக்கும் நட்சத்திரங்கள்.

அடைந்த தொலைவிலிருந்து
கடந்த தூரத்தையும்
கடக்க வேண்டிய எல்லைகளையும்
அம்மலை சதா கற்றுத் தருகிறது.

புதுக் கவிதை

Site Meter