முதல் பக்கம் » கவிதை » மரபுக் கவிதை
மரபுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

வேதாந்தப் பாடல்கள் - மாயையைப் பழித்தல்

பாரதியார்
உண்மை யறிந்தவ ருன்னைக்க ணிப்பாரோ
மாயையே - மனத்
திண்மையுள் ளாரைநீ செய்வது
மொன்றுண்டோ - மாயையே.

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின் முன்
நிற்பாயோ - மாயையே.

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற் றாய்கெட்ட
மாயையே - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் மாயையே.

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே - இந்தத்
தேகம்பொய் யென்றுணர் தீரரை
யென்செய்வாய் - மாயையே

இருமை யழிந்தபின் எங்கிருப் பாயற்ப
மாயையே - தெளிந்
தொருமைகண் டார்முன்ன மோடாது
நிற்பையோ - மாயையே.

நீதரு மின்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே.

என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட வல்லேன்
மாயையே - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்வ
ராதுகாண் - மாயையே

யாருக்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு
வேனுன்னை - மாயையே.

மரபுக் கவிதை

Site Meter