நந்தலாலா
பாரதியார்
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.