முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

கிழிபடும் நீலவானம்

திலகபாமா

நிரம்பியிருக்கிறது நீர்
அழுத்தி மூடியதில்
சுவாசக் காற்று தீர்ந்து விடும் நிலையில்
நீச்சலில் நான்

எனை மூழ்கடித்திருக்கும்
நீரைக் கண்டு மகிழ முடியாத
தாகத்துள் எப்போதும்

மூச்சுத் திணறும் போதெல்லாம்
விதானம் வெடித்துத் திறக்க
ஏங்கும் மனம்

எனக்கான காற்றின் தேவை
உணராத நீ
உணர்த்தும் முயற்சியில்
திமிங்கலமாய் நான்
பெருமூச்சின் ஓசை
அலைகடல் கிழித்துக் கேட்கும்

தொலைந்து போன
தொட்டி வாழ்வு பற்றி நீ
மகிழ்ச்சி கொண்டதாய்
கவலையோடு பேச
சப்தமின்றி நீல வானம்
கிழிபட்டுக் கொண்டிருந்தது

கவிதை தொகுப்பு

Site Meter