குஜராத் மாநில அரசின் சுற்றுலாத்துறை விளம்பர தூதராக பணியாற்ற இந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் ஒப்புக் கொண்டார். இதுகுறித்து, குஜராத் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், குஜராத் வளர்ச்சிப் பணிகளில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பங்கேற்பார். குஜராத் மாநிலத்தின் சுற்றுலாத்துறையை உலகளவில் வளர்ச்சியடைய செய்ய, அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர், சென்ற மாத தொடக்கத்தில் சந்தித்து பேசினர். அதன்பின், முதல்வர் நரேந்திர மோடி, நடிகர் அமிதாப் பச்சனை மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கக் கோரி, கடிதம் ஒன்று எழுதினார். அந்த கடிதத்தில், குஜராத்தின் சுற்றுலாத்துறை மூலம் மாநிலத்தின் விழிப்புணர்வை அதிகரிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். முதல்வர் நரேந்திர மோடியின் பல்வேறு விதமான பணிகள் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதால், அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக, அமிதாப் பச்சன் அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளாராம்.