தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ரீமா சென். விஜய்யுடன் 'பகவதி', விக்ரமுடன் 'தூள்', கார்த்தியுடன் 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் நடித்தவர், கடைசியாக தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ராஜபாட்டை' படத்தில் ஸ்ரேயாவுடன் சேர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழிலதிபருக்கும் சென்ற மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்ததையொட்டி படங்களில் நடிப்பதை ரீமா சென் தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகர் விஜய் தயாரிக்க இருக்கும் 'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரீமா சென். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளிவந்த படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. தமிழில் வரவேற்பை பெற்றதையடுத்து பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் ரஜினிகாந்த் நடிக்க 'அந்தாகானூன்' என்ற பெயரில் வெளியாகி, ரஜினிக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அனைத்து மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. தற்போது அப்படத்தினை மீண்டும் தமிழில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் விஜய். இப்படத்தை இயக்கப் போவது விஜய்யின் உறவுக்காரப் பெண் சினேகா. விஜயகாந்த் நடித்த பாத்திரத்தில் நடிக்க பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். பியா, கார்த்திகா, ரீமா சென் உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தில் ரீமாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம். 'சட்டம் ஒரு இருட்டறை' தனக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரியாக இருக்க வேண்டும் என்பதால், போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக இருக்க, யோகா, உடற்பயிற்சி என தயாராகி வருகிறாராம் ரீமா. வீட்டுக்காரர்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டீங்களா அம்ணி?