ஒரு பரபரப்பை இன்னொரு பரபரப்பால்தான் அடக்க வேண்டும் என யாரோ த்ரிஷாவிடம் சொல்லிவிட்டார்கள் போல. போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷாவின் பெயர் ஏகத்துக்கும் ரிப்போராகிக் கொண்டிருக்க, அவரோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு அட்வைஸ், கருத்து என தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருகிறார். ஏற்கெனவே அசின் இலங்கை போன விவகாரத்தில் கருத்து சொல்லியிருந்த த்ரிஷா, இப்போது மீண்டும் அதுபற்றிப் பேச ஆரம்பித்துள்ளார். "அசின் இலங்கைக்குப் போனதே தவறு. இங்கே உள்ள பிரச்சினைகள் தெரிந்தும் அவர் வேண்டுமென்றே போனது போலாகிவிட்டது. இப்போதும் சொல்கிறேன்... என்னை அழைத்திருந்தால் நிச்சயம் நான் போயிருக்க மாட்டேன்..." என்று கூறியுள்ளார். இன்னொரு பக்கம், கேட்டால் கூட கல்யாணம் பற்றி பதில் சொல்லாமல் தவிர்க்கும் த்ரிஷா, இப்போது தானாகவே முன்வந்து கல்யாண மேட்டரையும் பேசுகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், "எல்லோரும் என் கல்யாணம் பற்றியே கேட்கிறார்கள் (இதுபற்றி அந்தப் பேட்டியில் கேள்வியே இல்லை!). நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். நிச்சயம் முன் பின் தெரியாதவரை கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன்" என்று கூறியுள்ளார். இந்த போதை மருந்து விவகாரத்தில் பெயர் கெட்டாலும், த்ரிஷாவுக்கு ஒரு பெரிய லாபமாம்... பாலிவுட்டில் இப்போது அவரைப் பற்றித் தெரியாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறதாம்! ஜகஜால போதைக் கில்லாடி!
ஒரு பெண் ஒரே மேடையில் இரு ஆண்களை திருமணம் செய்யும் கதையம்சத்துடனான புதிய படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் அன்புவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் மிட்டாய் என்ற படத்தை இயக்கியிருப்பவர் இயக்குநர் அன்பு. இதில் சந்தோஷ், பிரபா என 2 பேர் நாயகர்களாகவும், மாயா உன்னி நாயகியாகவும் நடித்துள்ளனர். கதைப்படி. சந்தோஷும், பிரபாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் மாயா உன்னியை காதலிக்கின்றனர். மாயா உன்னியும் இருவர் அன்பிலும் நெகிழ்கிறார். நண்பர்கள் இருவரையும் அவரும் காதலிக்கிறார், ஒருவரை ஒதுக்கிவிட்டு இன்னொருவரை திருமணம் செய்ய அவருக்கு மனம் வரவில்லை. என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ். இரண்டு பேரையுமே திருமணம் செய்து கொள்வது போல் கதையை இயக்குநர் முடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கதாநாயகர்களுடனும் மாயா உன்னி மாலையும் கழுத்துமாய் திருமண கோலத்தில் இருப்பது போன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது தமிழ் கலாசாரத்துக்கு எதிராக படம் எடுத்திருக்கும் இயக்குநர் அன்புவுக்கு கொலை மிரட்டலும் வந்திருக்கிறதாம். இதுபற்றி அன்பு கூறுகையில், காதலையும், நட்பையும் வைத்து இப்படத்தை எடுத்துள்ளேன். ஒரு பெண் முடிவு எடுத்துவிட்டால் யார் என்ன செய்ய முடியும்? என்பதே படத்தின் கரு. புரட்சிகரமான கருவுடன் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் வருகின்றன. சிலர் டெலிபோனில் என்னை மிரட்டுகிறார்கள். ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதுதான் நம் கலாச்சாரம். இரு ஆண்களை திருமணம் செய்வது போல் எப்படி படம் என்று மிரட்டுகிறார்கள். என் கதைக்கு தேவையான முடிவைத்தான் கிளைமாக்சில் வைத்துள்ளேன். படத்தை பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளேன். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன, என்றார். அட்றா சக்க... அப்படிப்போடு..இனி எப்படியெல்லாம் கலாச்சார சீர்கேடு வர காத்திருக்குதோ.....
நடிப்பு என் ரத்தத்தில் இருக்கிறது. அதை முழுமையாக அனுபவிக்கிறேன் என்றார் கரீனா கபூர். இதுபற்றி அவர் கூறியது: நான் நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்தவள். அதனால் அது என் ரத்தத்தில் இருக்கிறது. நடிப்பை முழுமையாக அனுபவிக்கிறேன். ஏதோ பாடினோம், ஆடினோம் என்று செல்ல விரும்பவில்லை. சவாலான கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனது முதல் படமான ரெபியூஜியை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. அது ஸ்பெஷலான படம். அதுமட்டுமல்லாமல், சாமெலி, ஓம்காரா, ஜப் வி மெட், 3 இடியட்ஸ், குர்பான் போன்ற படங்களில் என் கேரக்டர்கள் வித்தியாசமாக அமைந்தது. இது மாதிரியான வித்தியாசமான கேரக்டர்களில் வேறு எந்த நடிகைகளும் நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். என் சினிமா பயணம் வண்ணமயமாக சென்றுகொண்டிருக்கிறது. இப்போது கஜோலுடன் வி ஆர் ஃபேமிலி என்ற படத்தில் நடித்து வருகிறேன். கஜோலுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இருவருக்குமே சமமான கேரக்டர்கள்தான் என்றாலும் மென் கேரக்டர் சிக்கலானது. ஸ்டெப்மம் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் இது என்றாலும் இந்திய தன்மைக்கு கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கிறது. இதில் ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த கேரக்டரில் நான் நடித்துள்ளேன். கலைக் குடும்பத்திலயிருந்து வந்தவருக்கு இதெல்லாம் ஒரு சப்ப மேட்டர்......
அஜித்தும் ரஜினியும் நண்பர்கள் என்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சாதாரண ரசிகர்களுக்கு கூட தெரியும். ரஜினி சொன்னால் அஜித் கேட்பார், அது எதுவாக இருந்தாலும்! அந்தளவுக்கு அவரை நம்பும் தல, சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ் கேட்டு ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கன்னடத்தில் வெளிவந்து பெரும் கலெக்ஷனை அள்ளிய படம் ஆப்தமித்ரா பார்ட் 2. இது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம். இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும். அதிலும் ரஜினியே நடிக்க வேண்டும் என்பது பி.வாசுவின் விருப்பம். இதற்காக ரஜினியிடம் அவர் பேசிக் கொண்டேயிருக்கிறார் பல மாதங்களாக! சென்னையில் ஒரு 'ப்ரிவியூ' ஏற்பாடு செய்து அதை ரஜினியையும் பார்க்க வைத்தார். படத்தை பார்த்த ரஜினி பி.வாசுவை கட்டி தழுவி பாராட்டிவிட்டு காரேறி போய்விட்டார். இந்த நிலையில்தான் அஜித்தை அழைத்து இதில் நீங்க நடிச்சா பெரிய ஹிட் ஆகும். உங்களுக்கும் நல்ல பேர் கிடைக்கும் என்றாராம். 'மங்காத்தா' படத்திற்கு பிறகு பில்லா-2 ல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜித், சந்திரமுகி-2 ல் நடிக்கப் போகிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தில் சூறாவளியாக சுற்றிவரும் செய்தி! சூப்பர் ஸ்டாரு சொன்னா அருள் வாக்கு சொன்ன மாதிரிதான்!
குஷ்பு, அமலான்னு வடக்கு நாயகிகளின் துடுக்கு பார்வைக்கு தனது துண்டு, துக்கடாவையெல்லாம் கூட அடகு வைத்து ரசித்தவன் தமிழன். அந்தளவுக்கு இதயம் கவர்ந்த நாயகிகளை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. இன்டஸ்ட்ரிக்கு வந்து முதல் பர்த்டே கொண்டாடுவதற்குள்ளாகவே மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு கிளம்புகிற அளவுக்குதான் அமைகிறது வாய்ப்புகள். இதில் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவெல்லாம் கொஞ்சம் அழுத்தசாலிகள்தான். இவர்களது இடத்தை பிடிக்கிற முழு தகுதியும் இருக்கிறது என்று சமீபத்தில் அனைவராலும் வியக்கப்பட்ட நாயகி நம்ம எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் பட நாயகி. எமி தன் உதட்டை திறந்தாலே ஊ...லலலாவாகிற அளவுக்கு விழுந்து விழுந்து ரசித்தான் தமிழன். அந்த பொண்ணு அடுத்ததா என்ன படத்துல நடிக்குதாம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட அவனுடைய காதில் தேன் வந்து பாய்கிற செய்தி இதுதான். விரைவில் சூர்யாவுடன் ஜோடி சேர்க்கிறார் எமி. எனக்கு தமிழ்நாடு ரொம்ப பிடிச்சுருக்கு. நல்ல சான்ஸ் வந்தா நான் இங்கேயே செட்டில் ஆயிருவேன் என்றெல்லாம் ஆசை தெரிவித்த எமி, இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டாராம். எமியை இங்கே வரவழைத்தவர் விஜய் என்றால் வாழ வைத்தவர் கவுதம் மேனன். இவர் இயக்கப் போகும் படத்தில்தான் சூர்யாவுக்கு ஜோடியாகிறார் எமி. நம்மூர் நாயகிகளே உஷாரா இருக்கீங்களா.....