(16 Mar 2010)தெலுங்கில் ஜெனிலியா நடித்த ரெடி படம், முதலில் கன்னடத்தில் ரீமேக் ஆனது. இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. திரைக்கதை, வசனம் எழுதி மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். பாலாஜி ஸ்டுடியோஸ் சார்பில் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்ட்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு உத்தமபுத்திரன் என பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பாக்யராஜ், விவேக், கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி, ஆர்.சுந்தர்ராஜன், ஆர்த்தி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பாலசுப்ரமணியம். இசை, விஜய் ஆண்டனி.
(16 Mar 2010)தம்பிக்கு இந்த ஊரு வெளியாகிவிட்டது. அடுத்து பேரரசுவின் திருத்தணி. பன்ச் டயலாக், குத்துப் பாட்டு, கமர்ஷியல் குருமா என பேரரசுவின் அசைவ மெஸ் அயிட்டங்கள் அனைத்தும் திருத்தணியில் உள்ளது. அடுத்தடுத்து சுமாரான படங்களே தந்தாலும் ஆக்ஷன் ரூட்டை விட்டு பரத் விலகுவதாக இல்லை. திருத்தணிக்குப் பிறகு பரத் நடிக்கும் படம், இவன் யாரோ. கதையம்சம் உள்ள ஆக்ஷன் படம் என்று இந்தப் படத்தை வரையறுக்கலாம். மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் இவன் யாரோ படத்தை இயக்குகிறார். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என யாரும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. கதாநாயகி தேடும் படலம் தற்போது நடந்து வருகிறது. வெடிகுண்டு முருகேசன் படத்தை வெளியிட்டவர்கள் இவன் யாரோ படத்தை தயாரிக்கின்றனர்.
(16 Mar 2010)தமிழில் வாரம் தோறும் எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்றார் ரீமா சென். இது பற்றி அவர் கூறியது: பிரியதர்ஷன் இயக்கத்தில் அஜய் தேவ்கானுடன் கரம் ஹவா இந்தி படத்தில் நடிக்கிறேன். இதையடுத்து தேசிய விருது பெற்ற இயக்குனர் ராகுல் தோலகியா இயக்கும் இந்தி படத்திலும் நடிக்கிறேன். இது நகைச்சுவை கதை கொண்ட படம். இந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள். இது உண்மையில்லை. தமிழில் வாரம் தோறும் எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எனக்கு பிடித்த கதையாக, தயாரிப்பு நிறுவனமாக அது இல்லை. அதனால் படங்கள் ஏற்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன் என்று கூறினார்.
(16 Mar 2010)சௌந்தர்யா ரஜினிகாந்த்-அஸ்வின் திருமணம் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் தனது ஆக்கர் ஸ்டூடியோ மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். இவரும் தொழிலதிபர் மகன் அஸ்வினும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு வாழ்த்தினார். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தனர். இப்போது செப்டம்பர் 3-ஆம் தேதி, சென்னை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். திருமணத்துக்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
(16 Mar 2010)தமிழர்கள் கையில் தமிழ் சினிமா இருக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஆர்.எம். புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் முழுக்க முழுக்க புதியவர்களை வைத்து சைதை செல்லா என்ற படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை தென்னிந்திய வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது. பெப்சி தலைவர் வி.சி.குகுநாதன் முதல் சி.டி.,யை வெளியிட, நடிகர் ஆர்.கே., பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய வி.சி.குகநாதன், இந்த படத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இதுவரை திரையுலகிற்கு வராமல் ஒதுங்கி இருந்திருக்கிறார்கள் இவர்களைப் போன்றவர்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும். அப்போதுதான் நம் தமிழ் சினிமா தமிழர்களின் கையில் இருக்கும். மேலும் இப்படத்தின் பாடல்களை பார்த்தபோது இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார். சித்தாபதி இயக்கும் இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைக்க, நீலமேகன் பாடல்களை எழுதியுள்ளார். நாயகனாக விஜய் ஆனந்த் அறிமுகமாகிறார். மிதுனா நாயகியாக நடிக்க, சீதா, பொன்னம்பலம், மயில்சாமி, மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் சைதை செல்லா படத்தை எஸ்.ஆர்.முகேஷ், தயாரிப்பதோடு இப்படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகமாகிறார்.









