(04 Mar 2010)இந்தியில் லக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி. அதன்பின் உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்தார். ஆல்பம் தயாரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திவந்த ஸ்ருதி தற்போது தனது பார்வையை மீண்டும் இந்தி திரையுலக பக்கம் திருப்பி இருக்கிறார். இது பற்றி அவர் கூறியது: தென்னிந்திய படங்களில் இசையமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது அப்பா நடித்த படத்துக்கு இசையமைத்தேன். மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது மும்பையில் வீடு எடுத்து தங்கியுள்ளேன். இங்கு வந்தது, இந்தி படத்துக்கு இசையமைக்கத்தான். தனிப்பட்ட முறையில் இசை குழு ஒன்றும் நடத்தி வந்தேன். இப்போது அது இல்லை. ஆனால் பாடகி என்ற தகுதியை மட்டும் இழக்க மாட்டேன். மும்பையில் அருமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நடிப்பை பொறுத்தவரை நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். எதுவும் என்னை கவரவில்லை. நல்ல கதை அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறினார்.
(04 Mar 2010)கமர்ஷியல் கலந்த திகில் படத்தை இயக்க இருக்கிறார் திரு திரு துறு துறு பட இயக்குனர் நந்தினி. இதுபற்றி அவர் கூறியது: திரு திரு துறு துறு படத்துக்குப் பிறகு அதே மாதிரி நகைச்சுவை படம் இயக்கித் தரும்படி நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் ஒப்புக்கொள்ளவில்லை. நகைச்சுவை இயக்குனர் இமேஜ் வந்துவிடக்கூடாது என்று கருதினேன். அடுத்து அதே கண்கள் பட ஸ்டைலில் திகில் கதை ஒன்றை இயக்க இருக்கிறேன். ஒரு கிராமத்தில் தொடர்கொலைகள் நடக்கிறது. அதை கதாநாயகன் கண்டுபிடிப்பது கதை. கமர்ஷியல் படத்துக்கான அனைத்து அம்சங்களும் இருக்கும். பெண்களால் எல்லாவித படமும் இயக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவே திகில் படம் இயக்குகிறேன். இப்படம் பற்றிய முழு விவரத்தையும் விரைவில் தெரிவிப்பேன் என்றார்.
(04 Mar 2010)அடுத்த படத்தில் முன்னணி கதாநாயகனை இயக்குகிறேன் என்றார் வெங்கட் பிரபு. இது பற்றி அவர் கூறியது: கோவா படத்துக்கு இருவித விமர்சனங்கள் எழுந்தன. இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ளேன். எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று அதில் கற்றுக்கொண்டேன். புதுமையை எதிர்பார்ப்பவர்கள்கூட நடைமுறையில் உள்ள சில உறவுகளைப்பற்றி காட்டும்போது அதை ஏற்பதில்லை. கோவாவில் அதுதான் நடந்தது. சென்னை 28 மாதிரி இன்னொரு படம் தாருங்கள் என்கிறார்கள். அப்படியொரு படத்தை தந்தால் சென்னை 28 மாதிரியே இருக்கு என்பார்கள். ஒரே கதையை திரும்ப எடுக்க மாட்டேன். அடுத்து இரு கதைகளை எழுதி வருகிறேன். அதில் முன்னணி கதாநாயகன் நடிக்கும் கதை, இளம் கதாநாயகன்கள் கதை. இதுவரை இயக்கிய மூன்று படத்திலும் புதுமுகங்களை வைத்து இயக்கியதால் அடுத்து, பெரிய நடிகரை வைத்து படம் இயக்குங்கள் என்று தயாரிப்பாளர் சிவா கூறினார். அவருக்குத்தான் அடுத்த படம் இயக்குகிறேன். பெரிய நடிகர்கள் எல்லோருமே பிஸியாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களிடம் பேசி வருகிறேன். ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.
(04 Mar 2010)பிரபல நடிகர் அமீர்கான் அறிமுகமான கயமத் ஸே கயமத் தேக் மற்றும் ஜோஷ் படத்தை இயக்கியவர் மன்சூர்கான். பல வருடங்களுக்கு முன்பு தர்மேந்திரா நடித்த யாதோன் கி பாரத் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது அந்த படத்தை மீண்டும் தயாரிக்கிறார் அமீர்கான். நீண்ட இடைவெளிக்குப் பின், இப்படத்தை மன்சூர்கான் இயக்குகிறார். மேலும் அமீர்கானின் நெருங்கிய உறவினரான இம்ரான்கானும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். படத்தில் நடிக்கும் நாயகி வேட்டை தற்போது நடந்து வருகிறது. கஜினி, 3 இடியட்ஸ் என தொடர்ந்து பெரும் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அமீர்கானுடன் நடிக்க, இன்றைய முன்னணி நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வாய்ப்பு பிரபல நடிகை கரீனா கபூருக்குத் தான் கிடைக்கும் என்கிறது இந்தி திரையுலகம். மேலும் நீண்ட நாட்களாக தோல்வியில் துவண்டு கிடக்கும் இம்ரான்கானும் யாதோன் கி பாரத் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
நடிகை நமிதா நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. பரபரப்பான இந்த சம்பவம் நடந்தது ஆந்திராவில்!. தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகன் பாலகிருஷ்ணா நடிக்கும் சிம்ஹா படத்தில் அவருக்கு ஜோடியாக நமிதா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. சம்பவத்தன்று ஐதராபாத் அடுத்த ராம்பள்ளி என்ற கிராமத்தில் சிம்ஹா பட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தனர். பாலகிருஷ்ணா பங்கேற்கும் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம் என்று கூறி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும், விலையுயர்ந்த கேமரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்களுக்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்த இயக்குனர் சீனு, வேறு இடத்தில் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தெலுங்கானா ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டதால், நடிகர் பாலகிருஷ்ணாவும், நடிகை நமிதாவும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை.









