(16 Mar 2010)மே மாதம் நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக பரிமாணம் கொள்கிறது. அரசியல் பிரவேசத்தையொட்டி சீமான் பரபரப்பாக இருப்பார் என்று பார்த்தால், நிதானமாக அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தார். கதாநாயகன் விஜய். தாணு தயாரிப்பில் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் ஒரு வரியை சொல்லி விஜய்யின் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் சீமான். ஜெயம் ராஜா, சித்திக் இயக்கும் படங்களுக்குப் பிறகு பகலவன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் விஜய். ஏப்ரல், மே மாதங்களில் அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் இப்போது பகலவன் கதையை முடிக்கும் பணியில் சீமான் ஈடுபட்டிருக்கிறார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனிடம் சீமான் கூறிய இரண்டு கதைகளில் ஒன்று இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.
(16 Mar 2010)ரெட்டச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தது சந்தோஷமாக இருந்தது என்று இயக்குனர் பாலசந்தர் கூறினார். இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ரெட்டச்சுழி. இப்படத்தில் இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். விழாவில் பேசிய பலரும் ஐஸ்வர்யா ராயின் அழகை ரொம்பவே வர்ணித்து பேசினார்கள். நடிகர் பார்த்திபன் பேசுகையில், தனக்கே உரிய பாணியில் பல கவிதை வரிகளை கொட்டினார். சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழியை ரெட்டைச்சுழி என்றும் சொல்லலாம் என்று கூறிய பார்த்திபன், கொஞ்சம் விவகாரமாகவும் பேசினார். விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள். நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்... பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 50 கே.ஜி. தாஜ்மஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம், என்று ஏடாகூடமாக பேசி கைத்தட்டல் பெற்றார் பார்த்திபன். இயக்குனர் பாலசந்தர் பேசுகையில், நான் இந்த விழாவுக்கு வரும்போது படத்தின் டிரைலரை பார்க்கும் சந்தோஷத்தில் வந்தேன். மேடையேறியதும் சந்தோஷம் இரட்டிப்பாகி விட்டது. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த சீட் எனக்கு. இந்த கிழவனுக்கு என்ன ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா... ஆராதிக்கிறதோட விட்டுறணும், என்றார். பாரதிராஜா பேசும்போது, எனக்கு சீட் கொஞ்சம் தூரமா போட்டுட்டாங்க. ஐஸ்வர்யா ராய்க்கு அற்புதமான கண்கள் இருக்கிறது. சிரிப்பில் கர்வம் இல்லை. கர்வம் இல்லாத பொண்ணு. அதுதான் அவருக்கு சொத்து, என்றார்.
(16 Mar 2010)விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு, முன்னணி டெக்னீஷியன்களுடன் கைகோர்ப்பதில் குறியாக இருக்கிறார் சிம்பு. இப்போது, தான் இயக்கும் வாலிபன் படத்துக்கான வேலைகளைத் துவக்கியுள்ள சிம்பு, இதன் ஒளிப்பதிவுப் பொறுப்பை பி.சி. ஸ்ரீராமிடம் ஒப்படைக்க விரும்பியுள்ளார். ஆனால் தனக்குப் பிடித்த இயக்குனர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றுவதில் குறியாக இருக்கும் பி.சி., சிம்புவுக்கு முதலில் பிடிகொடுக்கவில்லையாம். உடனே, பி.சி. ஸ்ரீராம் மீதான தனது அபிமானத்தை பல வழிகளிலும் காட்ட முயல, விஷயம் தெரிந்த பிறகு கதை கூட கேட்காமல் வாலிபன் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளார் பி.சி. ஸ்ரீராம். ஏற்கெனவே விக்ரம் குமாரின் 24 படத்துக்கு ஒப்பந்தமாகியிருந்தார் பி.சி. அந்தப் படம் டிராப்பாகி விட்டதால் அதே தேதிகளை சிம்புவுக்கு கொடுத்துள்ளாராம். வாலிபன் படத்தை எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தன்னை வைத்து காளை என்ற படத்தை எடுத்து நஷ்டப்பட்ட சக்கரவர்த்திக்கு, அந்த நஷ்டத்தை வாலிபன் மூலம் சரி கட்டித்தருவதாகக் கூறியுள்ளாராம் சிம்பு.
(15 Mar 2010)செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் இரு படங்களை தயாரிக்கிறார். பார்த்திபன் இயக்கி நடிக்கும் வித்தகன், மகிழ் திருமேனி இயக்கும் முன்தினம் பார்த்தேனே. இந்த இரு படங்களில் முன்தினம் பார்த்தேனே முதலில் திரைக்கு வருகிறது. சஞ்சய், ஏக்தா என்ற புதுமுகங்கள் இதில் நடித்துள்ளனர். படத்தின் பெயரைப் போலவே இதுவொரு பக்கா காதல் கதை. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் இயக்குனரை பாராட்டியதோடு படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். அருமையான ஆபாசமில்லாத காதல் படமாம். இயக்குனர் மகிழ் திருமேனி, கௌதம் மேனனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவராம்.
(15 Mar 2010)தமிழ் நடிகர்கள்தான் இந்தியாவிலேயே சிறந்தவர்கள் என்று கார்த்திக் கூறினார். பெதர் டச் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஹேமந்த் தயாரிக்கும் படம் மாஞ்சா வேலு. அருண் விஜய், தன்ஷிகா, கார்த்திக் நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் நடிகர் கார்த்திக் பேசியது: இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் அனைத்து வகையிலும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். தமிழ் சினிமா தரத்திலும், தொழில்நுட்பத்திலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ் நடிகர்கள்தான் சிறந்தவர்கள் என்ற கர்வம் எனக்கு உண்டு. அவர்களை உருவாக்குகிறவர்கள் இயக்குனர்கள். என்னதான் எனக்கு திறமை இருந்தாலும் அதைக் வெளிக்கொண்டு வந்தவர்கள் எனது இயக்குனர்கள்தான். அவர்கள் அனைவரும் எனக்கு குரு. என்றார் கார்த்திக். விழாவில் கவிஞர் வாலி பாடல்களை வெளியிட, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், இயக்குனர்கள் சுந்தர்.சி, ஷக்தி சிதம்பரம், அமுதன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஷாம், ஜெய், சிபி, உட்பட பலர் பேசினார்கள். முன்னதாக ஹேமந்த் வரவேற்றார். முடிவில் டாக்டர் மோகன் நன்றி கூறினார்.









