மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் பயன் இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி

மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை கவுரவப்படுத்தும் வகையில், கடலில், பேனா ஒன்றை சிலையாக நிறுவ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்த தகவல், அரசு சார்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த முடிவுக்கு, கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியில், புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நாட்டையே உலுக்கி உள்ளது. திமுக அரசின் செயல்பாடு சரியில்லாததால் தான் கலவரம், வன்முறை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவே இல்லை. குறிப்பாக பெண்களுக்கு உரிமை தொகை ரூ 1000 வழங்கப்படவில்லை. இதை கேட்டால் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்கிறார்கள். பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை. ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது. மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

கடவுள் மறுப்பு உள்ளிட்டவை திராவிடத்தில்தான் உள்ளன. திராவிட மாடல் என்பதே இந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதுதான். ஆன்மீக அரசியல் எதிர்ப்பு கொள்கைதான் திமுகவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.