ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது: அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும், அதில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி, தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் கைவிடப்படவில்லை என்று தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் பட்டியலையும் பெட்ரோலிய மந்திரி வெளியிட்டார். 31 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மத்திய மந்திரி வெளியிட்டுள்ள விவரங்களின்படி தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 31 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறிவிடும். இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்காது; மாறாக பாதுகாக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவே இருக்கும். காவிரி பாசன மாவட்டங்களில் 31 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவற்றில் ஒன்று கூட இன்று வரை தொடங்கப்படவில்லை. அதனால், அவை அனைத்தும் புதிய திட்டங்களாகவே கருதப்பட வேண்டும்.

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தின்படி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால் அவை அனைத்தையும் கைவிடும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அந்தத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால், அவற்றுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.