ஓ.பி.எஸ்.க்கு உயர் நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்!

அதிமுக பொதுக் குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி பொதுக்குழுவிற்கு தடை கோரிய இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் தனது உத்தரவில், “ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர், உறுப்பினர்களை சமதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் பொதுக்குழுவை அனுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார். நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார். ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும். பெரும்பான்மையோரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்” என்ற கருத்தையும் தெரிவித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், வழக்கில் சம்மந்தம் இல்லாம் ஓ.பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை கூறியதால், பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்கும்படி வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று நாளை பிற்பகலுக்கு வழக்குகளை நீதிபதி தள்ளிவைத்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதி ஏன் என கேள்வி எழுப்பினார். அப்போது, ஓபிஎஸ் தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தங்களுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளதாலும், பொதுக்குழு நடக்க இருந்த கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்லல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மனுதாரர் (ஓபிஎஸ்) குறித்து தன் உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையிலேயே தற்போதும் அவரது தரப்பு செயல்பாடு உள்ளதாகவும் தனது அதிருப்தியை நீதிபதி வெளிப்படுத்தினார். அதன்பின்னர், நீதிபதியை மாற்றக் கோரி அளித்த கோரிக்கை குறித்த நடைமுறை தனியாக பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிபதி தெரிவித்துவிட்டார். மேலும், உங்கள் மனுதரரரை தவறாக வழிநடத்தாதீர்கள் என்றும், நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞரிடம் கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கும் ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மற்றொரு மனுதாரர் வைரமுத்து கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நாளை பிற்பகலில் விசாரிப்பதாக தெரிவித்து வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

இதையடுத்து, இன்று பிற்பகலில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு செய்தார். அதில், நீதிபதியை மாற்ற வேண்டுமென தங்களிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை வழக்கை விசாரிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். இன்று பிற்பகலிலும் கூட என்னுடைய நடவடிக்கைகளை கீழ்தரமான நடவடிக்கை என விமர்சித்துள்ளார். நீதிபதியை மாற்றும் கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும்” என கோரப்பட்டுள்ளது. கடிதத்தை பார்ப்பதாக, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி விளக்கம் அளித்துள்ளார்.