காஞ்சிபுரம் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டிற்கு சீல்!

ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு அதிக வட்டி கொடுத்த ஐஎப்எஸ் நிதி நிறுவன காஞ்சிபுரம் கிளை இயக்குனர் வீட்டில் திடீரென சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் (IFS) என்ற நிதி நிறுவனம் வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8000 ரூபாய் அதிக வட்டி தரப்படும் எனக்கூறி பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்தது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை முதல் திடீரென அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று காஞ்சியில் மூன்று இடங்களில் அந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகாமையில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குனராக உள்ள மின்மினி சரவணன் என்பவரது வீட்டில் ஐந்து பேர் கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை முதலே பல மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது வீட்டிற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

அன்மையில் நடந்த ஆருத்ரா பண மோசடியை தொடர்ந்து மீண்டும் ஒரு நிதி நிறுவனத்தின்
தொடர்புடையவர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையிட்டும், வீட்டிற்கு சீல் வைத்ததும் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பையும், முதலீடு செய்துள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.