ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும், எனக்கு கவலையில்லை: எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வம் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்; அதைப் பற்றி தனக்கு கவலையில்லை என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1.95 கோடி மதிப்பீட்டில், 24 முடிவற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடி வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற காரணத்தால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசு இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்தவில்லை. ஆட்சி பொறுப்பேற்ற 14 மாத காலத்தில் இத்திட்டத்தினை நிறைவேற்றி இருந்தால் தற்போது மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளுக்கு நிரப்பி இருக்க முடியும். விவசாயிகளின் நலனுக்காக அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் குறித்து முழுமையான விவரங்களை அறியாமல் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். திமுகவின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மீது அக்கறை இன்மையை காட்டுகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற அணி காலத்திலிருந்து நிர்வாக திறமையற்ற அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகத்தான் தற்கொலைகள் அதிகரித்து உள்ளன. அரசும், காவல் துறையும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டது. இதனால் தற்கொலைகளும், போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்து விட்டது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியும் இதுவரை தடை விதிக்கப்படாததால் பலர் தங்கள் இன்னுயிர்களை இழக்க நேரிடுகிறது. கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியும் கூட ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மக்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

மின்சார சட்ட திருத்த மசோதா நடந்து முடிந்த கதை. அது பற்றி இப்போது பேசி பலன் இல்லை. ஆனால் கொரோனா பேரிடரால் வருவாய் என்று மக்கள் தவித்து வந்த சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவை மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கால கட்டத்தில் இது போன்ற சுமையை தவிர்த்திருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வருகிறார். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அது குறித்து பேசுவது முறையல்ல. இவ்வாறு அவர் கூறினார்.