நீதிமன்ற உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிக்கின்றனர்: கிரண் ரிஜிஜு

”உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிப்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்,” என, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சொத்து பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் உள்ள ஷரத்துக்களை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை, ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் உட்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தாங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பையே நீதிமன்றங்கள் வழங்க வேண்டும் என, கபில் சிபல் உட்பட பல மூத்த எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களது மனநிலைக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்படும் போது நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் விமர்சிக்க துவங்குகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.