ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் 2-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது.க, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.

போட்டி நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:-

4 மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தது. உலகமே வியக்கும் அளவுக்கு போட்டிகளை நடத்தி முடித்துவிட்டோம். இதற்கு காரணமான, அமைச்சர் மெய்யநாதனையும், துறை சார்ந்த செயலாளர் அபூர்வாவையும், அவருக்கு துணைநின்ற அதிகாரிகளையும், அரசு அலுவலர்களையும் மனதார பாராட்டுகிறேன். உங்களுக்கு தரப்பட்டுள்ள பணியை மிக சிறப்பாக செய்துள்ளீர்கள். உங்களின் திறமை, செயலும் தமிழக அரசுக்கு மிக பெரிய பெருமையை ஏற்படுத்தி தந்துள்ளது. சென்னையில் உங்களுக்கு (விளையாட்டு வீரர்கள்) செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்காக மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இது உங்களுடைய நாடு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பற்றி புரிந்துகொள்வதற்கு எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. மிகவும் உயர்ந்த இந்த மெகா செஸ் திருவிழாவில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரிகள் தங்களுடைய இல்லங்களுக்கு போட்டிகளின் நினைவுகளை மட்டுமல்ல, கலாசாரம், மரபு மற்றும் தமிழ் உணவின் சுவையையும் எடுத்துச்செல்வார்கள். இந்த நினைவுகளால் எப்போதும் நீங்கள் திளைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழ்நாட்டை விளையாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. உலக அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை தேடித் தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன கருவிகள் மற்றும் பயிற்சி வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம். இதன்படி, 50 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவர்களை மெருகேற்ற 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். இதேபோல் கராத்தே, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், வாள் சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கும் சிறப்பு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டு மிக முக்கியப் பங்காற்றுகிறது என்பதை தமிழ்நாடு அரசு நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு, பன்னாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நமது மண்ணின் விளையாட்டுகளை உலக அரங்குக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவும் முயன்று வருகிறோம். தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாக சிலம்பாட்டத்தில் ஒளிரும் வீரர்களுக்கு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பரிசுத் தொகைகளும், 12 ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் வழியாக புதிய திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு, பல இளைஞர்கள் விளையாட்டைத் தங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்க உதவும். நவீன தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய விளையாட்டு உட்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அதில் விளையாட்டுத் துறையும் முக்கியமானது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.