பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக எட்டாவது முறையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இது மாநில அரசியல் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் புயலைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து, பழைய கூட்டணி கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாக, நிதிஷ் குமார் தெரிவித்தார். பாஜகவை விட்டு விலகினால் முதலமைச்சராக நிதிஷ் குமார் தொடர ஆதரவு அளிப்பதாக தேஜஸ்வி யாதவ் உறுதி அளித்தார்.

இதன்படி நேற்று முன்தினம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், சில மணி நேரத்திற்கு பிறகு, தேஜஸ்வி யாதவுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்படி நேற்று பிற்பகல் 2 மணி அளவில், தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில், பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக, எட்டாவது முறையாக, நிதிஷ் குமார் பதவி ஏற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றுக் கொண்டார். அவர்களுக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், தேஜஸ்வி யாதவின் மனைவி, தாய், சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விரைவில், அமைச்சரவை பதவியேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதன்பின்னர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் நிதிஷ்குமார் கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சிதான் என்னை முதல்வராக்க நிர்பந்தித்தது. பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை ஜேடியூ விரும்பவில்லை. அதனால் பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டது.
நான் 2024-ம் ஆண்டு வரை இப்பதவியில் நீடிப்பேனா; இருப்பேனா என தெரியாது. ஆனால் நிச்சயம் 2014-ம் ஆண்டு போல் இனி வரும் ஆண்டுகள் இருக்காது. 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றவர்கள் (பாஜக) இனி 2024-ம் ஆண்டு வெல்ல முடியாது; பிரதமர் மோடியால் இனி வெல்ல முடியாது. 2024-ம் ஆண்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு இணைந்து செயல்பட வேண்டும். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது நான் பிரதமர் வேட்பாளர் இல்லை. பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.