கால்நடை கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜியின் தனி உதவியாளர் கைது!

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமான அனுப்ரதா மண்டல், அவரது தனி உதவியாளராகவும் இருந்தார். சி.பி.ஐ. 10 முறை சம்மன் அனுப்பியும், உடல் நிலையை காரணம் காட்டி அனுப்ரதா மண்டல் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிர்பூம் மாவட்ட தலைவராக இருப்பவர் அனுப்ரதா மண்டல். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமான அனுப்ரதா மண்டல், அவரது தனி உதவியாளராகவும் இருந்தார். இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு கால்நடை கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்ரதா மண்டலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. 10 முறை சம்மன் அனுப்பியும், உடல் நிலையை காரணம் காட்டி அனுப்ரதா மண்டல் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அனுப்ரதா மண்டல் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அனுப்ரதா மண்டல் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்த தகவல் அறிந்ததும், அங்கு ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அங்கிருந்து அனுப்ரதா மண்டலை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் சுமார் 2 மணி நேரமாக விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர் அசன்சோல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆசிரியர் வேலை நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக மேற்கு வங்க மந்திரி பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு ஓயும் முன்பு இன்று முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் உதவியாளர் அனுப்ரதா மண்டல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.