முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் 2011, 2016 ஆகிய இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 24 இடங்களில் காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரின் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது. முக்கியமாக மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்தில் சிக்கி வருகிறார்கள். முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வரிசையாக எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர், என்று பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்தான் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. கடந்த 10 வருடத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58,44,38,252 ரூபாய் சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது புகார் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றன. இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மட்டும் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், முதல்முறை முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடக்கிறது. முதல்முறையாக முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் பக்கம் முதல்வர் ஸ்டாலின் அரசு போகசை திருப்பி உள்ளது.

இந்த ரெய்டுக்கு காரணம் என்ன என்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக அறிக்கை வெளியிட்டுப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும். எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது 11.08.2022 ஆம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.1/AC/2022 பிரிவு 13(2) r/w 13(1) (e) of PC Act 1988, 109 r/w 13(2) r/w 13(1) (e) of PC Act 1988 and 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது. மேலும் இவ்வழக்கு மேற்படி வழக்கின் விசாரணை தொடர்பாக திரு.K.P.P.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 12.08.2022-ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது, என்று கூறப்பட்டுள்ளது.