யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் மாயம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று அதிக காற்று வீசியதால் கவிழ்ந்தது. இதில் 40-க்கும் மேற்ப்பட்டோர் பயணித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகு கவிழ்ந்ததும் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீந்தி கரையேறினர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புல்வா( 50), ராஜ்ராணி (45), கிஷான் (6 மாதம்) ஆகிய 3 பேர் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும் 25 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த படகு பாண்டா மாவட்டம் மார்காவில் இருந்து பதேபூர் மாவட்டம் ஜராவ்லி காட் நோக்கி சென்ற நிலையில் கவிழ்ந்துள்ளது. படகு விபத்து தொடர்பாக மார்கா போலீசார் விசாரித்து வருகின்றனர். மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் ராகேஷ் சச்சன், ராம்கேஷ் நிஷாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.