தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், படகுகள், மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதி வருகிறது. ஆனால் மீனவர் சிறைபிடிப்பு சம்பவம் குறைந்தபாடில்லை.
ஆகஸ்ட் 10ஆம் தேதி மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 10-8-2022 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.