காஷ்மீரில் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தல்!

எல்லை பகுதிகளில் டிரோன்களில் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பயங்கரவாதி சுட்டதில் சில போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை பகுதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படுவதற்காக நடத்தப்படும் இந்த கடத்தலை இந்திய ராணுவத்தினர் தடுத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்துவது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், எல்லை பகுதிகளில் டிரோன்களில் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக இன்று ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கதுவா, சம்பா, தோடா உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடந்தது. ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து ஜம்மு சர்வதேச எல்லை பகுதியில் டிரோன் மூலம் கடத்தப்பட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்யும்போது நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதி அளித்த தகவலின் அடிப்படையில் ஜம்மு எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதியை அழைத்து சென்றபோது அவர் ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து சுட்டப்படி தப்பிக்க முயன்றார். இதையடுத்து, போலீசார் சுட்டதில் பயங்கரவாதி உயிரிழந்தார். பயங்கரவாதி சுட்டதில் சில போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டிரோன் மூலம் வந்த வெடிபொருள் பார்சலை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு திறந்தபோது, அதில் ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.