8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு!

8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தேச நலனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த சேனல்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடத்த செய்தி தொகுப்பாளர்களின் புகைப்படங்கள் மற்றும் டிவி சேனல் லோகோக்கள் கொண்ட “போலி மற்றும் பரபரப்பான சிறுபடங்களை” பயன்படுத்தின. அவற்றில் 7 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவை என்றும் 1 சேனல் பாகிஸ்தானை சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐடி விதிகள் 2021 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை மொத்தம் 102 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 86 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் 114 கோடி பார்வையாளர்கள் கொண்ட எட்டு யூடியூப் சேனல்கள், ‘இந்தியாவில் உள்ள மத சமூகங்களிடையே பொய் பிரச்சாரங்களால் வெறுப்பை பரப்புகிறது’ என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மதக் கட்டிடங்களை இடிக்க இந்திய அரசு உத்தரவிட்டது, இந்தியாவில் மதப் பண்டிகைகள் கொண்டாடுவது, மதப்போர் அறிவிப்பது போன்றவற்றை தடை செய்ய இந்திய அரசு உத்தரவிட்டது என்பன போன்ற பொய்யான செய்திகளை பகிர்ந்துள்ளன என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் உண்மையான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் செய்தி ஊடக சூழலை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில், “இந்தியாவின் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு மற்றும் இந்தியாவின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கவே சில சமூக ஊடக சேனல்களுக்கு எதிரான நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக” மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.