பாஜகவில் தேர்தலே இல்லாமல் போய்விட்டது: சுப்பிரமணியன் சுவாமி

நிர்வாகிகள் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலே பாஜகவில் இல்லாமல் போய்விட்டதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

முக்கிய பதவிகள், நிர்வாகிகள் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலே பாஜகவில் இல்லாமல் போய்விட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து நியமனங்களும் மோடியின் அனுமதி பெற்றுதான் நடக்கிறது என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுயிருப்பதாவது:-

பாஜகவின் ஆரம்ப நாட்களில், நாங்கள் கட்சி மற்றும் பாராளுமன்ற கட்சி தேர்தல்கள் மூலம் நிர்வாகிகள் பதவிகளை நிரப்பினோம். கட்சி அரசியலமைப்புக்கு அது தேவை. ஆனால் இன்று பாஜகவில் தேர்தல் இல்லை. ஒவ்வொரு பதவிக்கும் மோடியின் ஒப்புதலுடன் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பாஜகவில் நேற்று அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்படி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்ற ஆட்சிமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.