தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபிஐஎம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றமிழைத்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 17 காவல் அதிகாரிகளே பொறுப்பு என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த 2018ஆம் ஆண்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. போராட்டம் நூறாவது நாளை எட்டியதையொட்டி, ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தினர். பேரணியில் சென்றவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தபோது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒரு நபர் ஆணைய விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது. இந்த அறிக்கையில், தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்தியதாகவும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூங்காவுக்குள் மறைந்திருந்த போலீசார் போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் அமைதியான முறையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்தனர். அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு பொதுமக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் அமைதியான முறையில் முறையிடச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியது. ஆனால், அன்றைய அதிமுக அரசு குற்றமிழைத்த போலீசார் மீது ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் மறுத்து வந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே மாதம் 18-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இதுவரையில் தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையை வெளியிடவில்லை.

இந்நிலையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகப் பல முக்கிய விசயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. வெளிவந்துள்ள அந்த செய்திகள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகச் சொல்லி வந்த ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், சட்டத்தைப் பின்பற்றாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வன்மத்தோடு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. அந்த செய்தியில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாளாமல், மறைந்துகொண்டு திட்டமிட்டுக் குறி பார்த்துச் சுடக் கூடிய துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பொதுமக்களைக் குருவிகளைச் சுடுவதைப் போல் சுட்டுக் கொன்றுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடுக்கவே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறும் வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. கலவரத்தில் எந்த ஒரு போலீஸ்காரருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் வரம்புகளை மீறிச் செயல்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்குக் காரணமான அப்போதைய ஐஜி, டிஐஜி, எஸ்.பி அதிகாரி உள்பட 17 பேர் மீதும், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக இருந்த அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், நீதி விசாரணையின் முழு அறிக்கையையும் ஆய்வு செய்த பிறகே அவ்வறிக்கை சம்பந்தமாகத் தெளிவான கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்ற போதிலும், தற்போது அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக வந்துள்ள செய்திகள் ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியவை உண்மை என்பதை உறுதி செய்துள்ளது. அதேசமயம், இச்சம்பவத்திற்கும், ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாகச் செய்திகள் உள்ளன.

இதுமட்டுமின்றி நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான உத்தரவினை களத்தில் இருக்கக் கூடிய அதிகாரிகள் மட்டுமே செய்ய முடியுமா என்பதும், அரசின் உயர்மட்ட அதிகாரத்திலிருந்தவர்கள் சம்பந்தமில்லாமல் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் உள்ளது. தமிழ்நாடு அரசும் அந்த அறிக்கையை வெளியிடுவதற்குத் தாமதப்படுத்துவதானது மேலும், மேலும் குழப்பங்களையும், பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இனியும் கால தாமதம் செய்யாமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக நீதியரசர் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள முழு அறிக்கையினை உடனடியாக வெளியிட்டு, குற்றமிழைத்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.