இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை!

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் லிங்குசாமி. இவர், ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை கொடுத்துள்ளார். தற்போது, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் தி வாரியர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது.
இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல படங்களை தயாரித்ததையடுத்து, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவத்திற்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற 1 கோடியே 3 லட்சம் ரூபாய் கடனை திரும்பச் செலுத்த இயக்குனர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து இயக்குனர் லிங்குசாமி, 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்தார். ஆனால் வங்கியில் போதிய பணம் இல்லாமல் லிங்குசாமி கொடுத்த திரும்பி வந்தன. இதையடுத்து இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரபல இயக்குநரான லிங்குசாமிக்கு செக் மோசடி வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.