மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருமாவளவன் மனு!

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டு கடந்த 29ஆம் தேதி காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கடந்த 29ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், முன்கூட்டி எந்த நோட்டீசும் அனுப்பாமல், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும், அதே நாளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த இருப்பதாகவும் கூறி, தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பையும், தங்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது என்பதால்,சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.