கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 68. கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவையடுத்து, அவரது உடல் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் சிபிஐ மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொடியை பாலகிருஷ்ணன் மறைவு குறித்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் கொடியேறி பாலகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சி.பி.ஐ.எம் தலைமைக் குழு உறுப்பினரும், மூன்று முறை அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான திரு. கோடியேரி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் அவர்கள், 1975-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது மிசா சட்டத்தின்கீழ் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.