சவுக்கு சங்கர், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க கோரி தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சவுக்கு சங்கர்சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் நீதித்துறை குறித்து, அவதூறாக பதிவிட்டது தொடர்பாக யூடியூப் பிரமுகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்ட அவர், பின்னர் நிர்வாக காரணங்களுக்காக கடந்த 16-ந் தேதி கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் பார்வையாளர்கள் சிறையில் சவுக்கு சங்கரை பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரியும் தொடர்ந்து 3-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறைசாலையில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.