சுங்கச்சாவடிகளில் தமிழர்களை நீக்கிவிட்டு வடமாநிலத்தவரை பணியமர்த்த முயற்சி: சீமான்!

தொழிலாளர் விதிகளுக்கு மாறாக நிகழ்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு என்பது ஏற்புடையதல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரம்பலூரிலுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 54 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், அனைத்து ஊழியர்களும் பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் டோல்கேட் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால், டோல்கேட் ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உளுந்தூர்பேட்டையில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரம்பலூரிலுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 54 பேரைத் தான்தோன்றித்தனமாக பணிநீக்கம் செய்திருக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் நடவடிக்கை அப்பட்டமான விதிமீறலாகும். பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அந்தத் தொழிலாளர்களை விதிகளுக்கு மாறாக, பணியில் இருந்து நீக்கி அறிவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்த முனைவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

சாலையில் பயணிக்க குடிமக்களிடம் வரிவசூலிக்கும் சுங்கச்சாவடி எனும் கட்டமைப்பையே நாம் ஏற்கவில்லை என்றாலும், தொழிலாளர் விதிகளுக்கு மாறாக நிகழ்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு என்பது ஏற்புடையதல்ல! தங்களது பதவிநீக்கத்தை ரத்துசெய்து, பணிநிரந்தரம் செய்யக்கோரும் சுங்கச்சாவடி தொழிலாளர்களது கோரிக்கையும், அதனை வலியுறுத்திய அறப்போராட்டமும் மிக நியாயமானது. ஆகவே, ஆளும் வர்க்கம் அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, உடனடியாக அதனை நிறைவேற்றித் தர வேண்டுமென வலியுறுத்துவதோடு, அத்தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெற நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.