அரசுத் தேர்வில் தமிழை புறக்கணிப்பதா?- மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

20 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுக்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை என்றால் எப்படி? என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன், மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை “ஸ்டாப் செலக்சன் கமிசன்” (SSC) விரைவில் நடத்த உள்ளது. இந்த தேர்வு குறித்து அண்மையில் வெளியான அறிவிப்பாணையில், தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம். இந்தி என இருமொழிகளில் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் இடம்பெறாது என பொருள்படும்படி அந்த அறிவிப்பாணை உள்ளது.

இதுகுறி்த்து மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன், மத்திய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

ஒன்றிய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20,000 காலியிடங்களுக்கு “ஸ்டாப் செலக்சன் கமிசன்” (SSC) பணி நியமன அறிவிக்கையை 17.09.2022 அன்று வெளியிட்டுள்ளது. இது மிகப்பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு ஆகும். ஒரு கோடி பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

பணி நியமனத் தேர்வுக் கேள்வித் தாள் இரண்டு மொழிகளில் மட்டுமே – இந்தி, ஆங்கிலம் – இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில மொழிகளுக்கு இடம் இல்லை. இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. இந்தி அல்லாத மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு பாரபட்சம் காண்பிப்பது ஆகும். மேலும் இப்படி பணி நியமனம் பெறப் போகிற ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் எப்படி இவர்கள் மக்களுக்கு சேவை ஆற்றப் போகிறார்கள்?

ஏற்கெனவே உள்ளூர் தேர்வர்களின் பிரதிநிதித்துவம் தெரிவு பட்டியல்களில் மிகக் குறைவாக உள்ளதென்ற பிரச்சினைகள் பல துறைகளின்/ நிறுவனங்களின் பணி நியமனங்களில் வெளிப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்டாப் செலக்சன் கமிசன் பணி நியமனங்களும், மொழிச் சமத்துவம் கடைப்பிடிக்கப்படாததால் அத்தகைய பாரபட்சத்தை உள்ளடக்கியதாகவே அமையப் போகிறது. எனவே உடனடியாக தாங்கள் தலையிட்டு ஸ்டாப் செலக்சன் கமிசன், மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்களை உறுதி செய்ய அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கடிதத்தில் சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.