தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது: வைகோ

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது, திருக்குறள் குறித்து தவறான தகவல்களை ஆளுநர் பரப்பி வருகிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

திருக்குறள் பற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்துத்வா கருத்துக்களை தமிழகத்தில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங் பரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றன. அதற்கு உறுதுணையாக ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருக்குறளை பற்றி தவறாக பேசுகிறார். ஆளுநர் திரும்பத் திரும்ப தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது. இந்துத்துவ கருத்துக்களை எப்படியும் தமிழ்நாட்டில் திணித்து விட வேண்டும் என்று சங் பரிவார் இயக்கங்களுக்கு துணையாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

திருக்குறளைப் பற்றி ஆல்பர்ட் ஸ்விட்சரை விடவா வேறு எவரும் ஆராய்ச்சி செய்ய முடியும்? அவர் சொல்லி இருக்கிறார், உலகிலே இதற்கு நிகரான நூல் ஒன்றும் இல்லை என்று. பௌத்த மதத்தில் கூட இப்படிப்பட்ட கருத்துக்கள் இல்லை, அப்படிப்பட்ட உயர்ந்த கருத்துக்களை திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்று நோபல் பரிசு பெற்ற அவரே கூறியிருக்கிறார். அதைப்போல ஜி.யு.போப்பும் சரியான முறையில் மொழி பெயர்த்து இருக்கிறார். தவறாக மொழிபெயர்க்கவில்லை. ஆனால் திட்டமிட்டு ஒரு கூட்டம் வேலை செய்வதற்கு, ஆளுநர் துணை போவது துரதிஷ்டவசமானது. இன்னும் 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அவர், திராவிட மாடல் அரசு அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு, இன்னும் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.