சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று காலை தனது 82 வது வயதில் காலமானார்.

வட இந்தியாவில் சக்திவாய்ந்த கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். உத்தர பிரதேச மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும், 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையிலும், 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலும் என 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் தந்தையான இவர் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலைவிட்டு விலகி இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி முன்பாக முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவு அவரது உடல்நிலையை பார்த்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பரிவில் அனுமதித்தனர். முலாயம் யாதவ் உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தி அறிந்தவுடனே சமாஜ்வாடி கட்சித் தொண்டர்களும், உத்தரப்பிரதேச மக்களும் குருகிராம் மருத்துவமனைக்கு நோக்கி வரத் தொடங்கினர். ஆனால், தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அவரது உடல்நிலை சீரான பிறகு வருமாறும் கட்சித் தலைமை கேட்டுக்கொண்டது. முலாயம் சிங் யாதவ் உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தியறிந்தவுடன் அவரது மகன் அகிலேஷ் யாதவ் குருகிராம் சென்று அவரை கவனித்துக் கொண்டார். முலாயம் சிங் யாதவ் விரைந்து உடல்நலம்பெற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவ் மறைவால் உத்தரப்பிரதேச மக்கள், சமாஜ்வாடி தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.