மாணவியை கொலை செய்த இளைஞனுக்கு இந்த தண்டனைதான் சரி: விஜயகாந்த ஆவேசம்!

கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞனுக்கு தூக்குத் தண்டனை தரப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் லிஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:-

கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 2016ல் சுவாதி, 2021ல் சுவேதா, தற்போது சத்யபிரியா என ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.

ஒரு தலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்தால் ஆத்திரத்தில் அப்பெண்ணை கொலை செய்வது என்பது எந்தவிதத்தில் நியாயம். குற்றவாளி சதீசுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இனிமேல் காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகளும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.