காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் இந்து மதத்தைச் சேர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கியர்கள் மீது பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதை அடுத்து காஷ்மீரி பண்டிட்கள் மீதான தாக்குதல் குறைந்தது.

இந்நிலையில், காஷ்மீரில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். காஷ்மீரின், சோபியான் மாவட்டம் சவுதரி குண்ட் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரி பண்டிட்டான இந்து மதத்தைச் சேர்ந்த பூரன் கிரிஷன் பட், இன்று தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பூரன் கிரிஷன் பட்டை மீட்ட குடும்பத்தினர், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பங்கரவாதிகளை தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிருஷ்ணனுக்கு மனைவியும், 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.

காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் மரணத்திற்கு காரணமானர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பொது மக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பூரன் கிரிஷன் பட் மரணத்திற்கு, கே.எப்.எப் எனப்படும் காஷ்மீர் சுதந்திர போராளிகள் (Kashmir Freedom Fighters) அமைப்பு பொறுப்பேற்று உள்ளதாக, காவல் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.