ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

இந்து மதத்தினரை அவமதித்துவிட்டதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை பெரியார் திடலில் கடந்த மாதம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இந்து மதத்தினர் குறித்து ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஆ.ராசாவின் பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ஆ.ராசா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்து மதத்தினரை அவமதித்து விட்டதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடர்ந்த மனுவை ஐகோர்ட்டு அதிரடியாக தள்ளுபடி செய்தது. ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என கூறு வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் அடுத்த பிரதமரை ஸ்டாலின் தான் தீர்மானிப்பார் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கூறியிருக்கிறார்.

திமுகவின் 15-வது பொதுக்குழு தேர்தலில் மீண்டும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா, முதல்முறையாக நேற்று தனது சொந்த தொகுதியான நீலகிரி சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு குன்னூர், உதகை, என பல இடங்களில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் கட்சி கொடியேற்றிய ஆ.ராசா, அங்கிருந்த திமுகவினர் மத்தியில் மைக் பிடித்து பேசத் தொடங்கினார்.வரும் 2024ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமராக வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டலின் திகழ்கிறார் என்றும் திராவிட மாடல் தத்துவங்களால் வட மாநிலங்களை தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் எனவும் பேசினார்.

மதம், ஜாதியின் அடிப்படையில் அரசியல் செய்வதே ஆரிய மாடல் என்று விமர்சித்த அவர், சமூக நீதியும், சமத்துவமுமே திராவிட மாடல் எனக் கூறினார். மாதம் ரூ.1,000 தமிழக அரசின் நிதி நிலைமையை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் தேர்தலின் போது கூறியபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் எனவும் ஆ.ராசா உறுதியளித்தார்.
இதுமட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.