யாத்திரையை நிறுத்திவிட்டு இமாசல பிரதேசம் செல்லுங்கள்: ராகுலுக்கு வேண்டுகோள்!

இமாசல பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே யாத்திரையை நிறுத்திவிட்டு இமாசல பிரதேசம் செல்லுங்கள் என்று கோவா மாநில முன்னாள் முதல் மந்திரி பிரான்சிஸ்கோ சர்தின்கா தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் பாத யாத்திரை தற்போது ஆந்திரா சென்றுள்ளது. காஷ்மீர் வரை பாத யாத்திரையாக ராகுல் காந்தி செல்ல திட்டமிட்டுள்ளார். 150 நாட்கள் மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் 3,570- கி.மீட்டர் தூரம் நடந்தே சென்று காஷ்மீரில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடா யாத்திரையை நிறுத்தி விட்டு தேர்தல் நடைபெற உள்ள இமாசல பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பியும் கோவா மாநில முன்னாள் முதல் மந்திரியுமான பிரான்சிஸ்கோ சர்தின்கா தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்தும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று கூறியுள்ள பிரான்சிஸ்கோ சர்தின்கா, பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சி அடிமட்ட அளவில் வளருவதற்கு அவசியமானது என்றும், அதேவேளையில் தேர்தல் நடைபெற உள்ளதால் ராகுல் காந்தி அங்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இமாசல பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.