மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம்: தமிழிசை செளந்தரராஜன்!

தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்தப்படுவதே பந்த் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது உறவினர் இல்லத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவை வந்தார். அவர் வரும் வழியில் வழக்கத்தை விட தீவிரமாக பாதுகாப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கோவை விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தாரஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவை என்றாலே பரபரப்பு என்று இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும். கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று என்ஐஏ விசாரணைக்கு உத்தவிட்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு செயல்பட வேண்டும். கோவை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி இருக்கின்றது. ஏன், இப்படி நடந்தது என்பதை காவல்துறை பார்க்க வேண்டும். என்ஐஏ மட்டுமல்ல, தமிழ்நாடு காவல் துறையும், கோவை சம்பவத்தில் கவனமுடன் இருந்து இருக்க வேண்டும்.

கோவையில் நடந்த சம்பவம் முதலில் கார் கேஸ் சிலிண்டர் என்று மேலோட்டமாக கூறப்பட்டது. பின்னர் அது வேறு விதமாக மாறியது. ஒருத்தர் மேல கவனத்தை செலுத்தாமல் முற்றிலும் பாதுகாப்பை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். குண்டு வெடித்ததை பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா? மக்கள் எல்லோரும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கின்றனர். அத்தகைய கருத்துகள் வரும் போது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது. பந்த் நடத்துவது என்பது அனைத்து இயக்கங்களும் ஏற்றுக்கொள்ளும் போராட்ட வழிமுறை. இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பை தெரிவிக்க நடத்துவது தான் பந்த். கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. அமைதியான நிலையில் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் முறை தான் பந்த். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.