அவையில் ஜாதி, மதத்தை குறிப்பிட்டால் நடவடிக்கை: ஓம் பிா்லா எச்சரிக்கை!

‘அவையில் எந்தவொரு ஜாதியையோ அல்லது மதத்தையோ ஒருபோதும் குறிப்பிடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை விடுத்தாா்.

மக்களவையில் நேற்று திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினா் ஏ.ஆா்.ரெட்டி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது குறித்து கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘காங்கிரஸ் உறுப்பினா் தெளிவற்ற ஹிந்தியில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளாா். நானும் அதுபோன்ற தெளிவற்ற ஹிந்தியிலேயே பதிலளிக்கிறேன்’ என்றாா்.

அப்போது, ‘தான் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சோ்ந்தவா் என்பதாலேயே எனது ஹிந்தி மொழி புலமை குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விமா்சித்தாா்’ என்று ஏ.ஆா். ரெட்டி குறிப்பிட்டாா்.

அவ்வாறு தனது சொந்த சமூகப் பிரிவை காங்கிரஸ் எம்.பி. குறிப்பிட்டு பேசியதைக் கேட்ட அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அவையில் எந்த உறுப்பினரும் இதுபோன்ற வாா்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இதனை மீறும் உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்று எச்சரித்தாா். மேலும், ‘தான் பேசும்போது குறுக்கிட வேண்டாம்’ என்று அவைத் தலைவரை ஏ.ஆா். ரெட்டி கேட்டுக்கொண்டது குறித்து கடும் ஆட்சேபம் தெரிவித்த ஓம் பிா்லா, ‘உறுப்பினா்கள் அவைத் தலைவரை நோக்கி இதுபோன்ற கருத்தை ஒருபோதும் தெரிவிக்கக் கூடாது என்று மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவா் அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.