கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு கண்டறியப்பட்ட முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு!

கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு கண்டறியப்பட்ட முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உறுதி செய்துள்ளார். மொத்தம் 3 மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இரண்டில் நெகடிவ் எனவும், ஒன்றில் பாசிடிவ் எனவும் முடிவுகள் கிடைத்துள்ளன.

முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமியை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த சிறுமி எங்கும் பயணம் செய்தது போல் தெரியவில்லை. அவரது ஊரில் தான் இருந்துள்ளார். முதலில் ராய்ச்சூரில் உள்ள சிந்தனூர் அரசு மருத்துவமனையில் அதிகப்படியான காய்ச்சல் மற்றும் தலைவலிக்காக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். பின்னர் பல்லாரியில் உள்ள விஜயநகர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸிற்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் குணமடைந்துவிட்டார். சிறுமியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. எந்தவித பிரச்சினையும் இல்லை.

கர்நாடகாவில் இதுவரை ஒரே ஒரு ஜிகா வைரஸ் பாதிப்பு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. வேறெங்கும் இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். எந்தவொரு மருத்துவமனையில் பாதிப்பு கண்டறியப்பட்டாலும், உடனே ஜிகா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்படும் முதல் ஜிகா வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராய்ச்சூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் முதல்முறை ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோய்த் தொற்றுக்கு ஆளான ஏடிஸ் வகை கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இது டெங்கு மற்றும் சிக்கன்குனியா ஆகியவற்றை போல் பாதிப்புகளை உண்டாக்கும். பகல் நேரத்தில் தான் ஏடிஸ் வகை கொசுக்கள் மனிதர்களை கடிக்கும். அதாவது காலை மற்றும் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் ஏடிஸ் கொசுக்களின் பரவல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வைரஸ் முதன்முதலில் உகாண்டா நாட்டில் 1947ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பெரிய பாதிப்புகள் இல்லை என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு, அவர்கள் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மூளையை முடக்கும் வகையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.