அருணாச்சலில் இந்திய – சீன வீரர்கள் மோதல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

அருணாச்சலப் பிரதேச மாநிலம், தவாங் செக்டார் பகுதியில் இந்திய – சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து, நாடாளுமன்ற மக்களவையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து உள்ளார்.

அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில், தவாங் செக்டார் பகுதியில், கடந்த 9 ஆம் தேதி சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊருவ முயன்றன. அப்போது, இந்திய – சீனப் படைகள் மோதிக் கொண்டன. இந்த மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயம் அடைந்தனர். இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயம் அடைந்தனர். சீனத் தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோதல் குறித்த தகவலை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது.

இதற்கிடையே, சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் இன்று, இந்திய – சீன வீரர்கள் மோதல் சம்பவம் குறித்து, நாடாளுமன்ற மக்களவையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் அளித்து பேசியதாவது:-

கடந்த 9 ஆம் தேதி, தவாங் செக்டார் யங்ட்சி பகுதியில் ஆக்கிரமித்து தற்போதைய எல்லையை மாற்றி அமைக்க சீனப் படையினர் முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சி நமது படையினரால் உறுதியான முறையில் முறியடிக்கப்பட்டது. நமது எல்லையை ஆக்கிரமிக்க முயன்ற சீனப் படையினரை நமது படையினர் வீரமாக தடுத்து அவர்களின் நிலைக்கு திருப்பி அனுப்பினர். இந்த விவகாரம் சீனாவுடன் ராஜாங்க ரீதியிலும் கொண்டுச் செல்லப்பட்டது. எல்லைகளை பாதுகாக்கவும், எல்லையில் மாற்றங்களை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்கவும் நமது படைகள் உறுதியாக உள்ளது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்து உள்ளனர். இந்த மோதலில் நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை; பலத்த காயங்களும் ஏற்படவில்லை என்பதை இந்த அவைக்கு கூறிக் கொள்கிறேன். இந்திய ராணுவ கமாண்டோக்களின் சரியான நேர தலையீட்டால், சீனப் படைகள் அவர்களின் இடத்திற்கு திரும்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, நடைமுறையில் உள்ள விதிகளின் படி 11 ஆம் தேதி அந்த பகுதியில் இந்திய கமாண்டோ – சீன கமாண்டோ இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், எல்லையில் அமைதியை நிலைநாட்ட விரும்புவதாகவும், அத்துமீறி நுழைதல், தாக்குதல் போன்ற எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை என்று சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.