தனுஷ் தொடர்பான வழக்கு ஆவணங்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல்!

மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட நடிகர் தனுஷிற்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி விசாரணையை ஜன.5க்கு தள்ளி வைத்தார்.

நடிகர் தனுஷை தங்களது மகன் என உரிமை கோரி, மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. ‘இந்த வழக்கில் தனுஷ் தனது கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறி கதிரேசன், மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்தார். அதை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை ஜேஎம் 6 நீதிமன்றம் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சீராய்வு மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் கிளை பதிவுத்துறை தரப்பில், மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட நடிகர் தனுஷிற்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து மனுவின் மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறிய நீதிபதி விசாரணையை ஜன.5க்கு தள்ளி வைத்தார்.